ஹரியானா மாநிலம் நூ மாவட்டத்தில் நேற்று முன்தினம் (01) விஷ்வ இந்து பரிஷத் ஊர்வலம் நடந்தது. இதற்கு ஒரு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஊர்வலம் மீது சில மர்ம மனிதர்கள் கல்வீசியதால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அந்த மோதல் கலவரமாக வெடித்தது. கலவரத்தில் 2 ஊர்க்காவல் படை வீரர்கள் உள்பட 4 பேர் கொல்லப்பட்டனர். பின்னர் கலவரம் அருகில் உள்ள குருகிராம் மாவட்டத்துக்கும் பரவியது. வீடுகள், வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. இதனால் பலி எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. முஸ்லீம்களின் பள்ளிவாசல்களும் தாக்கப்பட்டுள்ளன.
நூ மற்றும் குருகிராம் மாவட்டங்களில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ள நிலையில் இணையதள சேவைகள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், அரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் கூறியதாவது,
வன்முறையின் மையப்புள்ளியாக கருதப்படும் மோனு மானேசர் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. அவர் மீது ராஜஸ்தான் அரசு வழக்கு பதிவு செய்துள்ளது. அவரை கண்டுபிடிக்க உதவும்படி ராஜஸ்தான் அரசாங்கத்திடம் கேட்டுள்ளேன். நாங்களும் உதவி செய்ய தயாராக இருக்கிறோம். இப்போது ராஜஸ்தான் காவல்துறை அந்த நபரை தேடி வருகிறது.
வன்முறை தொடர்பான சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் 116 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 190 பேர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. வன்முறைக்கு காரணமானவர்கள் இழப்புகளுக்கு பொறுப்பேற்கவேண்டும். சிசிடிவி காட்சிகள் மற்றும் தொலைபேசி அழைப்பு பதிவுகள் மூலம் காவல்துறை விசாரித்து வருகிறது.
அனைத்து மக்களையும் பாதுகாப்பது காவல்துறைக்கு சாத்தியமில்லை. மக்கள் அமைதியையும் நல்லிணக்கத்தையும் பேணவேண்டும் என்றார்.
மாநிலத்தில் 5 மாவட்டங்களில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டு, இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளது.
நூ, பரிதாபாத் மற்றும் பல்வால் மாவட்டங்கள் மற்றும் குருகிராமின் துணைப் பிரிவுகளில் ஆகஸ்டு 05 வரை இணைய சேவைகள் தடை செய்யப்பட்டு உள்ளன.
மேவாத் மாவட்டத்தில் ஏற்பட்ட வன்முறை அன்றைய தினமே குருகிராம் பகுதிக்கும் பரவியது. குருகிராமின் 57 வது செக்டரில் உள்ள ஒரு மசூதிக்கு நள்ளிரவில் தீவைக்கப்பட்டது. "இந்த தாக்குதலில் மசூதியின் இமாம் முகமது சாத் உயிரிழந்துவிட்டார்," என்று மசூதியின் நிர்வாகக் குழுவின் தலைவர் அஸ்லம் கான் பிபிசியிடம் கூறினார்.
குருகிராம் மற்றும் ஃபரிதாபாத்தில், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை மூடுவதாக நிர்வாகம் அறிவித்தது. நுஹ், குருகிராம் உள்ளிட்ட பல இடங்களில் ஏராளமான போலீஸ் படைகள் நிறுத்தப்பட்டுள்ளன.
யார் இந்த மோனு மானேசர்?
இந்த வன்முறையின் பிரதானமாக பார்க்கப்படும் பெயர் மோனு மானேசர். ஹரியாணாவில் மோனு பிரபலமானவர். இதற்கு முன் பசு பாதுகாப்பு என்ற பெயரில் நடந்த கொலைகளில் இவரது பெயர் தலைப்புச் செய்திகளில் இடம்பெற்றது.
மோனு மானேசர் ஹரியாணா அரசின் பசு பாதுகாப்பு பணிக்குழுவில் உறுப்பினராக உள்ளார். 28 வயதான மோனு மானேசர், பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமோ படித்துள்ளார். ஹரியாணா மாநிலம் மானேசரில் வசிக்கும் மோனுவுக்கு வீட்டு வாடகையே பிரதான வருமானம்.
ஹரியாணா பஜ்ரங் தளம் அமைப்பின் பசுப் பாதுகாப்புப் பிரிவின் மாநிலத் தலைவர் என்று தன்னை கூறிக்கொள்கிறார். ராஜஸ்தானைச் சேர்ந்த ஜுனத் நசிர் ஆகிய இருவரின் உடல்கள் பிப்ரவரி மாதம் ஹரியாணாவில் கண்டெடுக்கப்பட்டது. இந்த கொலையில் முக்கிய குற்றவாளியாக மோனு மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
அவரைத் தேடி வருவதாக ஹரியாணா போலீசார் தெரிவித்தனர். இதுவரை மோனு கைது செய்யப்படவில்லை.
பேரணிக்கு இரண்டு நாட்கள் முன்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்த மோனு மானேசர், பேரணியில் மக்கள் அதிகளவில் பங்கேற்க வேண்டும் என்றும் தானும் பேரணியில் பங்கேற்பதாகவும் கூறியிருந்தார். அவரது பங்கேற்கு காரணமாக மக்கள் கோபம் அடைந்ததாக பல ஊடங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதே நேரத்தில், விஷ்வஹிந்து பரிஷத் அமைப்பு கேட்டுக்கொண்டதால் தான் இந்த யாத்திரையில் பங்கேற்கவில்லை என்று மோனு பிடிஐ செய்தி முகமையிடம் கூறியுள்ளார்.