
வர்த்தகர் தினேஸ் ஷாஃப்டரின் மரணம் தொடர்பில், 23 பேரிடம் வாக்குமூலம் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் பிற்பகல் பொரளை பொது மயானத்துக்கு அருகில், கைகளும், கால்களும் கட்டப்பட்டு, பலத்த காயங்களுடன், காரில் இருந்த நிலையில் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் தினேஷ் சாப்டர் உயிரிழந்தார்.
இந்நிலையில், பொரளை மயானத்தில் பணியாளர்கள் சிலரிடமும் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக விசாரணைகளை முன்னெடுக்கும் உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, தினேஸ் சாப்டரின் காரில் இருந்த சாட்சியங்கள் மற்றும் சம்பவ இடத்தில் முன்னெடுக்கப்பட்ட பரிசோதனைகளுக்கு அமைய சந்தேகநபர்களை அடையாளம் காணபதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸ் பேச்சாளர், சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
வர்த்தகர் தினேஸ் சாப்டரின் மரணம் தொடர்பில், கிரிக்கட் வர்ணனையாளர் ப்ரையன் தோமஸிடம் குற்றப்புலனாய்வு திணைக்களம் நேற்று முன்தினம் இரவு வாக்குமூலம் பதிவு செய்துள்ளது.
மரணித்த வர்த்தகரிடம், ப்ரையன் தோமஸ் பெற்றுக்கொண்ட 14 கோடி ரூபா பணம் தொடர்பான பிரச்சினை குறித்தும், இதன்போது விரிவாக வினவப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கலந்துரையாடல் ஒன்றுக்கு செல்வதாக தமது மனைவிடம் கூறிவிட்டு நேற்று முன்தினம் பிற்பகல் 2.00 மணிமுதல் 3.00 மணிவரையான காலப்பகுதியில், கொள்ளுப்பிட்டி மலர் வீதிப் பகுதியில் உள்ள தமது வீட்டிலிருந்து தினேஸ் சாப்டர் வெளியேறியுள்ளார்.
எவ்வாறிருப்பினும், தம்மிடமிருந்து 14 கோடி ருபா பணத்தைப் பெற்றுக்கொண்ட கிரிக்கட் வர்ணனையாளர் ப்ரையன் தோமஸை சந்திக்கச் செல்வதாக தமது செயலாளரிடம் தினேஸ் சாப்டர் கூறியிருந்ததாக பொரளை பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்தத் தகவலின் அடிப்படையில், குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர், நேற்று முன்தினம் இரவு ப்ரையன் தோமஸின் வீட்டுக்குச் சென்று வாக்குமூலம் பதிவுசெய்துள்ளனர்.
இந்நிலையில், ப்ரையன் தோமஸுக்கு வெளிநாட்டு பயணத் தடை விதித்து, கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெக்குணவல நேற்று உத்தரவிட்டுள்ளார்.
சம்பவம் குறித்த விசாரணைகளுக்கு அமைய, பொரளை காவல்துறை நீதிமன்றில் முன்வைத்த விண்ணப்பத்துக்கு அமைய, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், தினேஸ் சாப்டரின் தொலைபேசித் தரவுகளை வழங்குமாறு, சம்பந்தப்பட்ட தொலைபேசிச் சேவை நிறுவனங்ளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.