காதி நீதிமன்ற திருத்தம் தொடர்பில் நீதி அமைச்சரை புத்தி ஜீவிகள் குழு சந்திப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

காதி நீதிமன்ற திருத்தம் தொடர்பில் நீதி அமைச்சரை புத்தி ஜீவிகள் குழு சந்திப்பு!

நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ அவர்களை (03/11/2022) Strengthen MMDA அமைப்பானது நீதி அமைச்சில் சந்தித்து தமது ஆலோசனைகளையும் முன் மொழிவுகளையும் முன்வைத்தது.

முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டத்திற்குத் திருத்தங்களைக் கொண்டு வருவதற்காக முன்னாள் நீதி அமைச்சர் அலி சப்ரி அவர்களினால் நியமிக்கபட்ட குழுவினுடைய பரிந்துரைகளில் சமூகத்திற்கு இருக்கின்ற அதிருப்தி தொடர்பில் நீதி அமைச்சருக்கு தெரியப்படுத்துவதோடு, அந்த அறிக்கை தொடர்பாக இருக்கின்ற விமர்சனங்களையும், முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்தினைத் திருத்தம் செய்கின்ற போது கவனத்திற் கொள்ளப்பட வேண்டிய முக்கிய விடயங்கள் தொடர்பில் வலியுறுத்துவதற்காகவும் இந்த சந்திப்பானது ஏற்பாடு செய்யப்பட்டது.

நேரில் 5 உறுப்பினர்களும் இணையவழியாக 5 உறுப்பினர்களும் என மொத்தமாகப் 10 உறுப்பினர்கள் கலந்துகொண்டு தமது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர்.

குறித்த கலந்துரையாடலில்,  முன்னாள் நீதி அமைச்சர் அலி சப்ரி அவர்களினால் நியமிக்கபட்ட குழுவினுடைய பரிந்துரைகளில் 

1.எமது மார்க்கத்தினுடைய வழிகாட்டல்களுக்குப் புறம்பான திருத்தங்கள் முன்மொழியப்பட்டிருப்பது சுட்டிக்காட்டப்பட்டது.

2. அதுபோல இந்த நாட்டிலே நீண்ட காலமாக நல்லிணக்கத்தோடு வாழ்கின்ற எமது சமூகத்தினுடைய உரிமைகளையும் அடையாளங்களையும் இல்லாமல் ஆக்கக்கூடிய வகையில் செய்யப்பட்டிருக்கின்ற பரிந்துரைகள் தொடர்பாகவும் எடுத்துக் கூறப்பட்டது.

3. மேலும் செய்யப்படுகின்ற திருத்தங்களாவன ஏற்கனவே இருக்கின்ற பிரச்சினைகளுக்குத் தீர்வை தருவது மாத்திரமல்லாமல் வேறு புதிய பிரச்சினைகளைத் தோற்றுவிக்காதவையாகவும் இருக்க வேண்டும் என்ற அடிப்படையில், தற்போது முன்மொழியப்பட்டிருக்கின்ற திருத்தங்களினால் தோன்றக்கூடிய புதிய பிரச்சினைகள் தொடர்பாகவும் நீதி அமைச்சருக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

மேற்சொன்ன மூன்று அடிப்படையிலும் எமது சமூகத்திற்குப் பாதகமான விடயங்களை உள்ளடக்கி இருக்கின்ற, முன்னாள் நீதி அமைச்சர் அலி சப்ரி அவர்களினால் நியமிக்கபட்ட குழுவினுடைய அறிக்கையின் அடிப்படையில் சட்டத் திருத்தமானது செய்யப்படக் கூடாது என்றும், அந்த அறிக்கையானது நிராகரிக்கப்பட வேண்டும் எனவும், குறித்த ஆலோசனைக் குழுவானது கலைக்கப்பட வேண்டும் எனவும் நீதி அமைச்சரிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

அத்தோடு இந்தக் குழுவினால் பரிந்துரை செய்யப்பட்டிருக்கின்ற அறிக்கையானது பெரும்பான்மை முஸ்லிம் சமூகத்தினுடைய அபிலாசைகளைப் பிரதிபலிக்கவில்லை என்பதோடு இந்த அறிக்கையானது பெரும்பான்மையான முஸ்லிம்களது அதிருப்தியைச் சம்பாதித்துள்ளது என்ற விடயமும் நீதி அமைச்சருக்கு எத்தி வைக்கப்பட்டது.

மேற்சொன்ன விடையங்கள் உள்ளடக்கப்பட்ட விரிவான அறிக்கையொன்றும் நீதியமைச்சரிடம் கையளிக்கப்பட்டது.

முன்னாள் நீதி அமைச்சர் அலி சப்ரி அவர்களினால் நியமிக்கபட்ட குழுவினுடைய அறிக்கை மீதான அதிருப்தியினை சமூகமாக வெளிப்படுத்த வேண்டிய அவசியம் உணரப்பட்டிருப்பதால் காலந்தாழ்த்தாமல் இயலுமான ஜனநாயக வழிகளில் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்துமாறு Strengthen MMDA அமைப்பு முஸ்லிம் சமூகத்தைக் கேட்டுக் கொள்கின்றது.

( பேருவளை ஹில்மி )

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.