உக்ரேனில் யுத்தம் தீவிரமடைந்துள்ளதையடுத்து, உக்ரேனில் வசிக்கும் இலங்கையர்களை ஒருங்கிணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு வெளிவிவகார அமைச்சு அங்காராவில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளது.
உக்ரேனில் உள்ள இலங்கையர்களுக்காக அங்காராவில் உள்ள இலங்கை தூதரகத்தில் 24 மணி நேர அவசர தொலைபேசி எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, அவர்களை +90 534 456 94 98 அல்லது +90 312 427 10 32 என்ற தொலைபேசி எண்களின் மூலம் தொடர்பு கொள்ளலாம்.
மேலும் slemb.ankara@mfa.gov.lk என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொண்டு தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என இலங்கை வெளிவிவகார அமைச்சு மேலும் தெரிவிக்கிறது.
இதேவேளை, ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான யுத்தம் இலங்கையையும் பாதகமாகப் பாதிக்கக் கூடும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
கொவிட் பரவியதன் பின்னர் மீண்டும் எழுச்சி பெற்று வருவது இலங்கையின் சுற்றுலாத் துறையாகும்.
ரஷ்ய மற்றும் உக்ரேனிய சுற்றுலாப் பயணிகள் நாட்டின் சுற்றுலாத் துறையில் பெரும் சதவீதத்தை உருவாக்குகின்றனர்.
ரஷ்யா மற்றும் உக்ரேன் ஆகிய நாடுகளும் இலங்கையின் தேயிலை ஏற்றுமதியின் இரண்டு பிரதான வாடிக்கையாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. (யாழ் நியூஸ்)