யாழ். சோமசுந்தரம் அவென்யூவில் உள்ள வீடொன்றில் வைத்து வயோதிபப் பெண்ணொருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பகுதியைச் சேர்ந்த மரியநாயகம் கனிக்கையம்மா ஜெயசீலி (வயது 72) என்பவரே கடந்த 22 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பிற்பகல் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார்.
வீட்டில் தனியாக இருந்த போது அங்கு வந்த இளைஞன், பெண்ணை பூந்தொட்டியால் அடித்து கொன்றுவிட்டு அவர் அணிந்திருந்த தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
கொலைச் சம்பவம் இடம்பெற்ற வீட்டிற்கு அருகில் உள்ள சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் யாழ். பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வந்தனர்.
கொலைச் சந்தேக நபர் சைக்கில் வண்டியில் தப்பிச் செல்லும் காணொளியை அடிப்படையாகக் கொண்டு விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார், யாழ்ப்பாணம் முல்லைவாய் பகுதியில் வைத்து சந்தேக நபரைக் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில் தனது மோட்டார் சைக்கிளின் குத்தகையை செலுத்துவதற்காக இவ்வாறான வன்முறையில் ஈடுபட நேரிட்டதாக சந்தேக நபர் தெரிவித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)