இந்திய - கேரள மாநிலத்தில் வரதட்சணை கொடுமை காரணமாக பெண் ஒருவர் அண்மையில் உயிரிழந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், மீண்டும் அதேபோல் வரதட்சணை கொடுமையால் சட்ட கல்லூரி மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டு சம்பவத்தில் அவரது கணவர் மற்றும் குடும்பத்தினரை பொலிஸார் அதிரடியாக கைது செய்தனர்.
கேரள மாநிலம் ஆலுவா பகுதியை சேர்ந்த மோஃர்பியா பர்வீன். இவர் தோடுபுழாவில் உள்ள சட்டக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது முகமது சுஹைல் என்பவர் ஃபேஸ்புக் மூலம் பழக்கமானார்.
இந்த நட்பு நாளடைவில் காதலாக மாற, இரு வீட்டாரின் சம்மதத்துடன் கடந்த ஏப்ரல் மாதம் திருமணமும் நடந்துள்ளது. சுஹைல் துபாயில் பணியாற்றி வருவதாக மோஃர்பியாவிடமும் அவரது குடும்பத்தினரிடமும் தெரிவித்துள்ளார். மோஃர்பியாவும் ப்ரீலான்ஸ் டிசைனராக இருந்து அவருக்கான வருமானத்தை ஈட்டி வந்துள்ளார்.
இந்நிலையில் ஒரு நாள் சுஹைல் திடீரென மோஃர்பியாவிடம் வந்து தான் ஒரு திரைப்படத்தை தயாரிக்க விரும்புவதாகவும் அதற்காக 40 லட்சம் தேவைப்படுவதாகவும் அதை மோஃர்பியாவின் வீட்டில் வாங்கித் தருமாறும் கேட்டுள்ளார்.
வரதட்சிணை என்பதை சிறிதும் விரும்பாத மோஃர்பியா, சுஹைல் கேட்டதை கொடுக்க மறுத்துவிட்டார். அன்றிலிருந்து அவருக்கு புகுந்த வீட்டில் பிரச்சினை தொடங்கியது. பின்னர்தான் சுஹைலுக்கு எந்த வேலையும் இல்லை என்பதும் முழுக்க மோஃர்பியாவின் வருமானத்தையே அவர் நம்பியிருந்ததும் தெரியவந்தது.
மோஃர்பியா பெற்றோர் வீட்டில் இருந்து பணம் வாங்கித் தராததால் சுஹைல், அவரது தந்தை, தாய் ஆகியோர் மோஃர்பியாவை வரதட்சிணை கேட்டு துன்புறுத்தியதாக மோஃர்பியாவின் தந்தை தெரிவித்துள்ளார்.
அவ்வப்போது இவர்களது கொடுமையை பொறுத்துக் கொள்ள முடியாத மோஃர்பியா கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஆலுவா காவல் கண்காணிப்பாளரிடம் புகார் கொடுத்தார். இதையடுத்து அந்த காவல் நிலையத்தின் சுழட்சி இன்ஸ்பெக்டர் சுதீர், மோஃர்பியா மற்றும் சுஹைலின் குடும்பத்தினரை வரவழைத்து பேசினார். இதனிடையே சுஹைலும் தலாக் (விவாகரத்து) நோட்டீஸை மோஃர்பியாவின் குடும்பத்திற்கு வழங்குமாறு பள்ளிவாயலில் பதிவு செய்திருந்தார். ஆனால் அங்கிருந்தவர்கள் தலாக் என்பது பழங்காலத்து முறை, எனவே விவாகரத்து வேண்டுமானால் சட்டப்படி செல்லும்படியாகும் கூறிவிட்டனர்.
இதனால் கடும் கோபத்தில் இருந்த சுஹைல், காவல் நிலையத்தில் மோஃர்பியாவையும் அவரது குடும்பத்தினரையும் தரக்குறைவாக பேசினார். தனது குடும்பத்தினரை தரக்குறைவாக பேசியதால் ஆத்திரமடைந்த மோஃர்பியா சுஹைலை அறைந்ததாக கூறப்படுகிறது. இதனால் மோஃர்பியாவிடம் இன்ஸ்பெக்டர் சுதிர் மிகவும் கடுமையாக நடந்து கொண்டதாகவும் அதனால் மோஃர்பியாவுக்கு மன உளைச்சல் ஏற்பட்டு அவர் சோர்வாக இருந்ததாகவும் அவரது தந்தை தெரிவித்தார்.
இதே நிலையில் வீட்டிற்கு வந்த சில மணி நேரத்தில் மோஃர்பியா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அவர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னர், ஒரு கடிதத்தை எழுதியிருந்தார். அதில் "எனது சாவுக்கு காரணம் கணவர் சுஹைல், அவரது பெற்றோர் யூசூப் - ருகியா, ஆலுவா காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சுதிர்" என எழுதியிருந்தது. மேலும் அதில் "அப்பா நீங்கள் சொன்னது சரி. சுஹைல் நல்லவன் கிடையாது" என எழுதியிருந்தார்.
இதையடுத்து முகமது சுஹைல் மற்றும் அவரது பெற்றோரை கோத்தமங்கலம் பொலிஸ் கைது செய்தனர். அது போல் இன்ஸ்பெக்டர் சுதிர் மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படாததால் அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காவல் நிலையத்திற்கு வெளியே ஆலுவா எம்எல்ஏ அன்வரர் சதாத் போராட்டம் நடத்தினார்.
ஏற்கெனவே கேரளாவில் விஸ்மயா தற்கொலை, பாம்பை ஏவிவிட்டு உத்ரா கொலை உள்ளிட்ட சம்பவங்கள் வரதட்சிணை கொடுமையால் ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது அதே வரதட்சனை கொடுமையால் மோஃர்பியா தற்கொலை செய்து கொண்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-இந்திய ஊடகம்