கிண்ணியாவில் நேற்று செவ்வாய்க்கிழமை (23) இடம்பெற்ற இழுவைப் படகு விபத்தில் நான்கு சிறுவர்கள் உட்பட 06 பேரின் உயிரைப் பறித்த சம்பவம் தொடர்பில் செய்தி சேகரிக்க வந்த ஊடகவியலாளர்கள் மூவர் மீது நடத்தப்பட்ட தாக்குதலை சுதந்திர ஊடக இயக்கம் வன்மையாகக் கண்டிப்பதோடு, சம்பவம் தொடர்பில் உடனடி விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென கோரியுள்ளது.
ஊடகவியலாளர்களான தினகரனின் (லேக் ஹவுஸ்) மாகாண செய்தியாளர் அப்துல் சலாம் முகமது யாசிம், எச்.எஸ்.எம். ஹலால்தீன், சக்தி/நியூஸ் ஃபர்ஸ்ட் மற்றும் ஏ.எல்.எம்.ரஃபைதீன் எனும் தினகரனின் அலுவலக நிருபர்கள், 'ஆத்திரமடைந்த பொதுமக்கள்' எனக் கூறப்படும் ஒரு குழுவினரால் தாக்கப்பட்டனர். தங்கள் கடமைகளை நிறைவேற்றுவதில் இருந்தும், விபத்து நடந்த இடத்தில் இருந்தும் துரத்தப்பட்டனர்.
முஹம்மட் யாசிம் என்பவர் தாக்கப்பட்ட பின்னர் விபத்து தொடர்பான நேர்காணல்கள் மற்றும் உரிய தகவல்கள் அடங்கிய கையடக்கத் தொலைபேசியை அங்கிருந்த ஒரு கும்பல் பலவந்தமாக எடுத்துச் சென்றது தொடர்பாக கிண்ணியா பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
கிண்ணியாவில் படகு விபத்து தவிர்க்கப்பட்டிருக்கக்கூடிய ஒரு சோகமாக இருந்தாலும், பொதுமக்களின் கோபத்தைப் புரிந்து கொள்ளக்கூடியதாக இருந்தாலும், உண்மையை சரியான நேரத்தில் மற்றும் அனைத்து விவரங்களுடனும் செய்தியாக்கும் ஊடக உரிமையை எந்த தரப்பினரும் கேள்விக்குட்படுத்தவோ அல்லது தடுக்கவோ கூடாது. ஊடகவியலாளர்களின் தாக்குதலையும், அவர்களின் தொழில் பணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதையும் FMM இயக்கம் ஒரு பாரதூரமான சம்பவமாகக் கருதுவதுடன், அதனை வன்மையாகக் கண்டிக்கிறது.
நாட்டில் எந்தப் பகுதியிலும் நடைமுறையில் இருக்கும் சட்டத்தை அமுல்படுத்துவது அரசாங்கத்தின் பொறுப்பு என்பதை வலியுறுத்தும் சுதந்திர ஊடக இயக்கம், ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல் சம்பவத்தை உடனடியாக விசாரணை செய்து, அதற்கு காரணமானவர்களை சட்டத்தின் முன் நிறுத்துமாறு அரசாங்கத்தை கோருகிறது.
தமிழாக்கம் - யாழ் நியூஸ்
சுதந்திர ஊடக இயக்கத்தின் அறிக்கை