ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு கடந்த அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு, தாக்குதலுக்கு முன்னாள் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சரவை உட்பட அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டுமென பரிந்துரை செய்துள்ளது. இது மேலதிக நடவடிக்கைகளுக்காக பாராளுமன்றம், சட்டமா அதிபர் மற்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆணைக்குழுவினால் அம்பலப்படுத்தப்படும் குற்றவாளிகளுக்கு எதிராக பாராளுமன்ற சட்டத்தின் ஊடாக சட்டத்தை அமுல்படுத்த முடியும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்திற்கு தேவையான மூன்றில் இரண்டு பெரும்பான்மை உள்ளது. எனவே, கோரிக்கைகளை முன்வைக்கும் போது கவனமாக இருக்குமாறும், மக்களை ஏமாற்றாமல் இருக்குமாறும் எதிர்க்கட்சிகளை ஜனாதிபதி வலியுறுத்தினார்.
இலங்கையில் முதற்தடவையாக உயர் தொழில்நுட்ப கேபிள்கள் மேல் அமைக்கப்பட்ட புதிய களனி பாலம் "கல்யாணி பொன் நுழைவு" (Golden Gate Kalyani) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரால், இன்று (24) மாலை திறந்து வைக்கப்பட்ட நிகழ்வில் உரையாற்றும் போதே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இதனைக் குறிப்பிட்டார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
களனி பாலத்தில் வாகனங்கள் கொழும்பிற்குள் பிரவேசிப்பதும் வெளியேறுவதும் காரணமாக ஏற்படும் கடும் போக்குவரத்தை குறைக்கும் வகையில் புதிய மேம்பாலம் நிர்மாணிக்கப்பட்டது.
இலங்கை அரசாங்கமும் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகமையும் (JICA) 2012 இல் பூர்வாங்கத் திட்டங்களைத் தயாரித்து, 2013 இல் சாத்தியக்கூறு ஆய்வின் பின்னர், 2014 இல் பாலம் அமைப்பதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. அதற்கான ஒப்பந்தங்களும் அதே ஆண்டில் கைச்சாத்திடப்பட்டது.
இத்திட்டம் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு புதிய வீடு, பொது மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு வேறு இடம் வழங்கிய பிறகு 2017 இல் கட்டுமானம் தொடங்கியது. இத்திட்டம் 55,000 மில்லியன் ரூபா செலவில் நான்கு வருடங்களில் பூர்த்தியானது.
புதிய மேம்பாலம் கொழும்பு-கட்டுநாயக்க அதிவேக வீதியின் நுழைவாயிலிலிருந்து பண்டாரநாயக்க சுற்றுவட்டம் வரை 6 பாதைகளை கொண்டதாகவும் அங்கிருந்து ஒருகொடவத்தை மற்றும் இங்குருகடே சந்தி வரை 4 பாதைகளாகவும் அமைக்கப்படவுள்ளது. இதன் மூலம் இங்குருகடே சந்தியில் இருந்து கொழும்பு துறைமுக நகரம் மற்றும் ஒருகொடவத்தையில் இருந்து அதுருகிரிய வரையான அதிவேக நெடுஞ்சாலையை அணுக முடியும்.
களனி ஆற்றின் ஓட்டத்திற்கு இடையூறு ஏற்படாத வகையில் இந்தப் பாலம் நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன், பிரதான வீதியின் இருபுறங்களிலும் பல வகையான செடிகள் நடப்பட்டு சுற்றுச்சூழல் அழகுற பாதுகாக்கப்பட்டுள்ளது.
2005 ஆம் ஆண்டு முதல் 2010 ஆம் ஆண்டு வரையிலான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் நாட்டில் பாரிய அபிவிருத்திச் செயற்பாடுகள் இடம்பெற்றன. ஏனைய அனைத்து பிரச்சினைகளுக்கும் நிலையான தீர்வுகள் வழங்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்தார்.
கோவிட் தொற்றுநோய் இருந்தபோதிலும், பல உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இந்தச் செயற்பாடுகள் அனைத்தும் தொடரும் என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, எதிர்காலத்தில் நாட்டை மூட வேண்டிய நிலை ஏற்படாவிட்டால், வாக்குறுதியளிக்கப்பட்ட அனைத்துத் திட்டங்களும் நிறைவேற்றப்படும் என்றும் தெரிவித்தார்.
அதேநேரம், அறிவார்ந்த மக்களே காத்திருங்கள். பொய்களை அனுமதிக்காதீர்கள். கோவிட் சவாலை எதிர்கொண்டு அரசாங்கம் முன்னெடுத்து வரும் அபிவிருத்தி வேலைத்திட்டத்தை குலைப்பதற்கு எதிர்க்கட்சிகளுக்கு இடமளிக்கக் கூடாது என நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
அப்போது கிண்ணியா பாலத்தை நிர்மாணிப்பதற்கான அனைத்து திட்டங்களையும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ செய்திருந்தார். எனினும், கடந்த அரசாங்கம் அதனை புறக்கணித்ததால் ஏற்பட்ட அவலத்திற்கு வருந்துவதாகவும், இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தியிருந்தால் விலைமதிப்பற்ற உயிர்களை காப்பாற்றியிருக்கலாம் எனவும் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
கோல்டன் கேட் கல்யாணி ஜப்பான்-இலங்கை நட்புறவின் மற்றொரு சின்னமாகும். ஜப்பான் தொடர்ந்தும் இலங்கைக்கு உதவிகளை வழங்கும் என இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் மிசுகோஷி ஹிடேகி தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்வில் மகாசங்கத்தினர், ஏனைய சமயத் தலைவர்கள், அமைச்சரவை மற்றும் இராஜாங்க அமைச்சர்கள், ஆளுநர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், தூதுவர்கள், வெளிநாட்டுப் பிரதிநிதிகள், அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் அரச அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
-தமிழாக்கம் - யாழ் நியூஸ்
(ஜனாதிபதி ஊடகப் பிரிவு)