பாராளுமன்ற வளாகத்தின் பாதுகாப்பிற்காக உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட அதி தொழிநுட்பத்துடன் கூடிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டன.
நாடாளுமன்ற வளாகத்தின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பாதுகாப்பு அமைச்சின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம், பாதுகாப்பு உபகரணங்களை நாடாளுமன்றத்திடம் ஒப்படைத்துள்ளது.
இந்த உபகரணங்களில் ட்ரோன் எதிர்ப்பு செயல்படுத்தும் அமைப்பு மற்றும் வான் பாதுகாப்பை உறுதி செய்ய பயன்படுத்தப்படும் பாதுகாப்பு தகவல் தொடர்பு சாதனங்கள் ஆகியவை அடங்கும்.
இந்த உபகரணங்களை இறக்குமதி செய்திருந்தால் ரூ. 19 மில்லியன் செலவாகிருக்கும், பாதுகாப்பு அமைச்சின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் வெறுமனே சுமார் ரூ. 7 மில்லியன் செலவில் இதனை உள்நாட்டிலேயே வடிவமைத்து பெரும் தொகை பணத்தை மிச்சப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட அதி தொழில்நுட்பத்துடன் கூடிய உபகரணங்களை வழங்கியமைக்காக சபாநாயகர் மற்றும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் பாதுகாப்பு படையினருக்கு நன்றி தெரிவித்தனர்.
நிகழ்வில் உரையாற்றிய பாதுகாப்புச் செயலாளர், பாதுகாப்புத் துறை மற்றும் ஏனைய தேசியத் தேவைகளுக்கான அதி தொழில்நுட்ப உபகரணங்களைத் தயாரித்து அதன் மூலம் தேசியச் செல்வத்தைப் பாதுகாக்கும் ஆற்றல் பாதுகாப்புப் படையினருக்கு இருப்பதாகத் தெரிவித்தார்.
இலங்கை நாடாளுமன்ற வரலாற்றில் முதல் தடவையாக 2020 ஆம் ஆண்டு ஜூலை மாதம் சகலரது பங்கேற்புடன் இடம்பெற்ற கூட்டு பாதுகாப்பு பயிற்சியின் போது அடையாளம் காணப்பட்ட பாதுகாப்பு தேவைக்கு இணங்க உபகரணங்களின் கையிருப்பு இன்று இவ்வாறு வழங்கப்பட்டதாக சார்ஜென்ட் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்தார். (யாழ் நியூஸ்)