தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சாணக்கியன் மற்றும் சுமந்திரன் ஆகியோர் கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரை சந்தித்துள்ளனர்.
கனேடிய நாடாளுமன்றத்தில் இன்று (23) இவ்விசேட சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக அவர் தனது முகப்புத்தக பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
"இன்றைய தினம் (23) நானும் ஜனாதிபதி சட்டத்தரணியும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய M.A சுமந்திரன் அவர்களும் கனேடிய பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் அழைப்பின்பேரில் ஒர் கலந்துரையாடலுக்காக கனேடிய பாராளுமன்றம் சென்று இருந்தோம். அதன்போது அங்கு 15 இக்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து எமது பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடும் வாய்ப்புக் கிடைத்தது.
இதன்போது எம் மக்களின் அரசியல் தீர்வு சம்பந்தமாகவும், வட கிழக்கில் நாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளான சட்டவிரோத காணி அபகரிப்பு, வள சுரண்டல்கள் அதனுடன் கூடிய அரசியல் நெருக்கடிகள் தொடர்பாகவும் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாகவும் கலந்துரையாடி இருந்தோம்.
மேலும் எமது மக்களுக்கு பயன் தரக்கூடிய எதிர்கால அபிவிருத்தி திட்டங்கள் சம்பந்தமாகவும் சில பல திட்ட முன்மொழிவுகளை முன்வைத்தோம்.
அத்துடன் கனடிய அரசாங்கமானது எமது மக்களுக்கான தீர்வுத் திட்டங்களை மிக விரைவில் பெற்றுத் தருவதற்கு உரிய அழுத்தத்தை இலங்கை அரசு மேல் பிரயோகிக்க வேண்டும் எனவும் எமது ஆணித்தரமான கோரிக்கைகளை முன்வைத்தோம்." என குறிப்பிட்டுள்ளார்.