புதிய அரசாங்கத்தை அமைக்க மக்கள் தயாராக வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச மக்களிடம் இன்று (16) கோரிக்கை விடுத்தார்.
மார்கஸ் பெர்னாண்டோ மாவத்தையிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்திலிருந்து காலி முகத்திடலை நோக்கி பேரணியாகச் சென்ற மக்களிடம், "இன்று நீங்கள் எதிர்நோக்கும் அனைத்து பாரதூரமான பிரச்சினைகளையும் தீர்க்கும் உண்மையான மக்கள் அரசாங்கத்தை உருவாக்கத் தயாராகுங்கள்" என்றார்.
அங்கு மேலும் பேசிய அவர்,
"மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தீர்க்க, நாட்டைக் கட்டியெழுப்ப நாங்கள் தயாராக இருக்கிறோம். வீதியில் இறங்கிய எங்களின் முயற்சியை தடுத்து நிறுத்தும் அரசாங்கத்தின் அனைத்து முயற்சிகளையும் முறியடித்து இங்கு வந்துள்ளோம்.
மக்களின் துயர் துடைக்க இந்த மாபெரும் பேரணி நடத்தப்படுகிறது. ஒவ்வொருவருக்கும் தங்களை வெளிப்படுத்த உரிமை உள்ளது. நமது சமுதாயத்தை கட்டியெழுப்பவும், சாமானியர்களின் அரசாங்கத்தை அமைக்கவும் நாங்கள் தயாராக உள்ளோம். எதிர்க்கட்சிகளை நசுக்க சட்டங்கள் பயன்படுத்தப்படுகின்றன" என்று குறிப்பிட்டார்.