பொருளாதார ரீதியில் பல்வேறு சவால்களை எதிர்கொள்ள வேண்டிய காலகட்டத்தில், அதனை கடந்து பயணித்துக் கொண்டுள்ளோம். சவால்களுக்கு மத்தியிலும் நாட்டின் பொருளாதாரம் மற்றும் மக்களின் அடிப்படை தேவைகளை அபிவிருத்தி செய்ய முதலீடுகளை செய்ய தொடர்ச்சியாக நடவடிக்கை எடுக்கப்படுமென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சபையில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (16), அரசாங்கத்தின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார்.
அவர் மேலும் கூறுகையில்,
பல்வேறு சவால்களுக்கு மத்தியில் இம்முறை வரவு செலவு திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது. என்பதை கூறியாகவேண்டும்.
கொவிட் -19 வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியில் ஏற்பட்ட சவால்களின் போது நாட்டின் பொருளாதாரத்தை வழமைக்கு கொண்டுவருவதை இலக்காக கொள்ளப்பட்டுள்ளது.
கொவிட் -19 வைரஸ் தொற்று காரணமாக மக்களுக்கு பாரிய கஷ்டங்கள் ஏற்பட்டுள்ளதுடன், முழு உலகத்திற்கும் பாரிய தாக்கம் ஏற்பட்டது. இலங்கைக்கும் இந்த சவால்களில் இருந்து விடுபட முடியவில்லை.
அரசாங்கமும் இந்த கொவிட் சவால்களில் இருந்து மக்களை பாதுகாக்க பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்தது. நாம் எடுத்த நகர்வுகள் காரணமாக பொருளாதாரத்தை வெகு விரைவில் வழமையான நிலைமைக்கு கொண்டுவர முடியும் என்பதே எமது நம்பிக்கையாகும்.
மட்டுப்படுத்தப்பட்ட நிதி நிலைமைகளுக்கு மத்தியில் சுபீட்சமான நோக்கு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த நாம் நடவடிக்கை எடுத்தோம். வேலையில்லா பட்டதாரிகளில் 60 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்புகளை பெற்றுக்கொடுத்துள்ளோம்.
வறுமை ஒழிப்பை மேற்கொள்ள குறைந்த வருமானத்தை பெரும் குடும்பங்களை சேர்ந்த ஒரு இலட்சம் பேருக்கு அரச துறையில் வேலைவாய்ப்புக்களை பெற்றுக்கொடுத்துள்ளோம். அவர்களுக்கு கொடுப்பனவுகளை பெற்றுக்கொடுக்க மாதத்திற்கு 3 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
சவால்களுக்கு மத்தியிலும் நாட்டின் பொருளாதாரம் மற்றும் மக்களின் அடிப்படை தேவைகளை அபிவிருத்தி செய்ய முதலீடுகளை செய்ய தொடர்ச்சியாக நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.
நீர்ப்பாசனம்,வலுசக்தி,பொதுப்போக்குவரத்து, நகர அபிவிருத்தி, சுகாதாரம், கல்வி மற்றும் வறுமை ஒழிப்பு ஆகியவற்றிற்காக முன்னெடுக்கப்பட்டுள்ள முதலீடுகளில் சவால்களை வெற்றிகொள்ள முடியுமாக உள்ளது.
எவ்வாறு இருப்பினும் கடந்த காலங்களில் எமக்கு அரச நிதி நெருக்கடி சார் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க நேர்ந்தது.
எனினும் எதிர்காலத்தில் நாட்டின் பொருளாதாரத்தை வழமைக்கு கொண்டுவரவும் அபிவிருத்திக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.
எமது நாட்டின் பொருளாதாரத்தில், சர்வதேச வைரஸ் தாக்கங்கள் காரணமாக பல சவால்களுக்கு முகங்கொடுக்க நேர்ந்துள்ளது.
சர்வதேச கையிருப்பு, மற்றும் நாணயத்தின் ஏற்ற தாழ்வு என்பவற்றை கையாள மத்திய வங்கியின் ஊடாக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
சுற்றுலாத்துறையை மீண்டும் ஆரம்பிக்கவும் இலங்கையின் சுற்றுலாத்துறையை கட்டியெழுப்பவும் எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும். அத்துடன் வெளிநாட்டு பணியாளர்களின் உறுதிப்பாட்டை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
பொருளாதார ரீதியில் பல்வேறு சவால்களை எதிர்கொள்ள வேண்டிய காலகட்டத்தில், அதனை கடந்து பயணித்துக் கொண்டுள்ளோம் என்பது எமக்கு தெரியும்.
வரவு செலவு திட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ள ஆரோக்கியமான யோசனைகள் மூலமாக எதிர்வரும் காலங்களில் பொருளாதாரத்தை பலப்படுத்துவோம் என்பதில் நம்பிக்கை உள்ளது.
ஜனாதிபதியின் தலைமையில் முன்னெடுக்கப்படும் சுபீட்சத்திற்கான நோக்கு வேலைத்திட்டத்தின் மூலமாக எதிர்கால திட்டங்கள் தெளிவாக முன்வைக்கப்பட்டுள்ளன. நாடு முகங்கொடுக்கும் சவால்களை வெற்றிகொள்ள சகல தரப்பும் கைகோர்க்க அழைப்பு விடுக்கிறேன் என்றார்.
-ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்