சப்புகஸ்கந்தவில் பயணப்பையொன்றிலிருந்து பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இருவர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளதாகக் காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
மட்டக்குளியைச் சேர்ந்த தம்பதியினரே (36 வயதான ஆண், பெண்) இவ்வாறு களனி வலய குற்ற விசாரணைப்பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது, பெண்ணின் சடலத்தை கொண்டு சென்றதாகக் கருதப்படும் பாரவூர்தியொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.
நேற்றுமுன்தினம் (04) சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை அண்மித்த குப்பை கிடங்கு ஒன்றில் கைவிடப்பட்டிருந்த பயணப்பையிலிருந்து பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டிருந்தது.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட பெண், மாளிகாவத்தை தொடர்மாடிக் குடியிருப்பை வசிப்பிடமாகக் கொண்டிருந்த 2 பிள்ளைகளின் தாயான, 44 வயதுடைய மொஹமட் ஷாபி பாத்திமா மும்தாஸ் என்பவரென அடையாளம் காணப்பட்டிருந்தார்.
ராகம போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் அவரது கணவரும் இரண்டு பிள்ளைகளும் சடலத்தை நேற்று பார்வையிட்டதன் பின்னர் குறித்த பெண்ணின் சடலம் இனங்காணப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.