நாட்டில் மிகவும் அரிய வகை இயற்கையான பினாகைட் (Phenakite Natural) இரத்தினக்கல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த இரத்தினக்கல் இலங்கையில் இதுவரை கண்டெடுக்கப்பட்ட பெனகைட் இரத்தினக்கற்களில் மிகப்பெரிய அளவிலானது என தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகாரசபை தெரிவித்துள்ளது.
பேருவளையில் உள்ள இரத்தினக்கல் வியாபாரி ஒருவரின் வசம் தற்போது இந்த இரத்தினக்கல் உள்ளது.
அவர் பலாங்கொடை பிரதேசத்தில் இருந்து இந்த இரத்தினக்கல்லை கொள்வனவு செய்துள்ளார்.
இதன் எடை 616.90 காரட் எனவும் இதன் விலை சுமார் 1 பில்லியன் ரூபா எனவும் அந்த வர்த்தகர் தெரிவித்தார்.
குறித்த வர்த்தகர் தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபைக்கு இது தொடர்பில் அறிவித்ததை அடுத்து அதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
இந்த இரத்தினக்கல் மிகவும் அரிதானது மற்றும் விலை உயர்ந்தது என தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபையின் தலைவர் திலக் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும் இதுபோன்ற இரத்தினக்கற்கள், இரத்தினகற்கள் சேகரிப்பாளர்களால் அதிக விலைக்கு வாங்கப்படுவதாகவும் அவர் கூறினார்.
மொஹமட் பஸ்ரீன் நசீர் என்ற இரத்தினக்கல் வியாபாரி கூறும்போது, "நான் பொதுவாக நாடு முழுவதும் இரத்தினக்கற்களை சேகரித்து தொழிலதிபர்களிடம் விற்று வருபவன்.
அப்படி சுமார் 4 கிலோ கற்கள் சேர்க்கப்பட்டது. அவற்றில் இந்த கல்லும் இருந்துள்ளது. அதை விற்கச் சென்றபோது, அதை ஒரு படிகம் என ஒதுக்கப்பட்டது. பின்னர் நான் இதை சோதனைக்கு உட்படுத்தினேன். அப்போதுதான் இதன் பெறுமதியை உணர்ந்தேன். என் வாழ்நாளில் இந்தப் பெயரை நான் கேள்விப்பட்டதே இல்லை" என்றார். (யாழ் நியூஸ்)