இலங்கையில் கைப்பணியாளர்களின் உற்பத்திப் பொருட்களை மெய்நிகர் முறையில் விற்பனை செய்வது தொடர்பில் தேசிய அருங்கலைகள் பேரவைக்கும், இலங்கை தபால் திணைக்களத்திற்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
தேசிய அருங்கலைகள் பேரவையில் பதிவு செய்துள்ள இலங்கை கைப்பணியாளர்களின் உற்பத்திப் பொருட்களை மெய்நிகர் முறையில் (Online) விற்பனை செய்வது தொடர்பிலான ஒப்பந்தமொன்று அந்த நிறுவனத்திற்கும், இலங்கை தபால் திணைக்களத்திற்கும் இடையில் இன்று (09) வெகுசன ஊடக அமைச்சில் கைச்சாத்திடப்பட்டது.
தேசிய கைப்பணியாளர்களின் உற்பத்திப் பொருட்களை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சந்தையில் மெய்நிகர் முறையில் விற்பனை செய்து, அதனை பகிர்ந்தளிப்பதற்காக மெய்நிகர் டிஜிட்டல் தளமொன்றை "Online Digital Platform" உருவாக்குவதே இதன் மூலம் எதிர்பார்க்கப்படுகின்றது.
53 நாடுகளிலுள்ள 67 இடங்களை உள்ளடக்கி இலங்கை தபால் திணைக்களம் முன்னெடுக்கின்ற "Expedited Mail Service" முறையினூடாக இந்த பொருட்களை பகிர்ந்தளிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த திட்டத்தின் ஊடாக உள்நாட்டு கைப்பணியாளர்களின் உற்பத்திப் பொருட்களுக்கான சந்தை வசதிகள் விரிவுபடுத்தப்படுவதுடன், இலங்கைக்கு அந்நியச் செலாவணியினை பெற்றுக்கொள்வதற்கும் வாய்ப்பு கிடைக்கின்றது. தேசிய அருங்கலைகள் பேரவையில் பதிவுசெய்துள்ள கைப்பணியாளர்களின் உற்பத்திப் பொருட்களை கொள்வனவு செய்து, இலங்கை உற்பத்திப் பொருட்களின் தரத்தினை பேணி, இம்முறையின் ஊடாக விற்பனை செய்வதற்கு அந்த நிறுவனம் எதிர்பார்க்கின்றது. தேசிய அருங்கலைகள் பேரவையின் கீழ் இயங்கும், இலங்கை கைப்பணியாளர்களின் உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்யும் 05 விற்பனை நிலையங்களினூடாக அவ்வாறு கொள்வனவு செய்யப்படும் உற்பத்திப் பொருட்கள், மெய்நிகர் முறையில் விற்பனை செய்வதற்கு அனுப்பி வைக்கப்படும்.
இவ்வேலைத்திட்டமானது 2021 நவம்பர் 22ஆம் திகதி மாலை 3.00 மணிக்கு பத்தரமுல்லையிலுள்ள "Waters Edge" இல் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.
வெகுசன ஊடக அமைச்சர் கெளரவ டலஸ் அழகப்பெரும அவர்களின் தலைமையில் இன்று இடம்பெற்ற புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் நிகழ்வில் தபால்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன மற்றும் தேசிய அருங்கலைகள் பேரவையின் தலைவர் சம்பத் அரகபொல ஆகியோர் உட்பட இன்னும் பலர் கலந்துகொண்டனர்.