நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில் மக்கள் தமது தனியார் வாகனங்களைப் பயன்படுத்தும் போது அவதானத்துடன் செயற்பட வேண்டுமென இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
வாகன இறக்குமதி கட்டுப்பாடுகள் எப்போது நீக்கப்படும் என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் பேசிய அவர்,
"நீங்கள் ஏன் வாகனங்களை இறக்குமதி செய்ய எண்ணுகிறீர்கள்? உண்மையைச் சொல்வதென்றால், நாட்டில் குறைந்தபட்சம் 3-4 பேர் தனியார் வாகனத்தில் பயணிப்பதை உறுதி செய்ய சட்டம் இயற்ற வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.
ஒருவரால் பல வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதனால் ஏராளமான எரிபொருள் வீணாக்கப்படுகிறது. இந்த நேரத்தில், புதிய வாகனங்களை இறக்குமதி செய்வது பற்றி சிந்திக்காமல், இருக்கும் வாகனங்களை எவ்வாறு பொறுப்புடன் பயன்படுத்த முடியும் என்று சிந்திக்க வேண்டும்."
தற்போது நாடு எதிர்கொள்ளும் அந்நிய செலாவணி நெருக்கடியையும் அவர் சுட்டிக்காட்டினார்.
"தற்போது, ஒரு நாடு என்ற வகையில், எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு மாதாந்தம் தேவைப்படும் 500 மில்லியன் டாலர்களை தேடிக்கொள்ள முடியாமல் முழு உலகிற்கும் கடனாளியாகி வருகிறோம். எதிர்காலத்தில் நெருக்கடி இன்னும் மோசமாகும். எதிர்காலத்தில் தேவையான பால் மாவை கூட இறக்குமதி செய்ய முடியாத சூழ்நிலையை நாம் எதிர்கொள்ள நேரிடும் என்று நான் நினைக்கிறேன், ”என்று அவர் கூறி தனது உரையை முடித்தார். (யாழ் நியூஸ்)