கிழக்காசிய நாடான ஜப்பான் நாட்டின் இளவரசி மகோ, சாதாரண குடிமகனான தன் காதலர் கெய் கொமுரோவை மணந்ததை அடுத்து, தன் இளவரசி அந்தஸ்தை துறந்தார்.
ஜப்பான் மன்னர் நருஹிட்டோ. இவரது மருமகள் மகோ. இவர் டோக்கியோ சர்வதேச கிறிஸ்துவ பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்று வந்தார்.
அப்போது இவருடன் படித்த சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த கெய் கொமுரோ என்ற இளைஞரை காதலித்தார். இருவரும் திருமணம் செய்து கொள்ள போவதாக 2017இல் அறிவித்தனர். சாமானியரை திருமணம் செய்வதால் அரச குடும்பத்தை விட்டு வெளியேறி, இளவரசி அந்தஸ்தை துறக்க வேண்டிய நிலை மகோவுக்கு ஏற்பட்டது, அதற்கு அவர் மனப்பூர்வமாக சம்மதித்தார்.
இதற்கிடையே கொமுரோவின் தாய் மீது பண மோசடி புகார் சுமத்தப்பட்டது. இதனால் திருமணம் தடைபட்டது. இதையடுத்து கெய் கொமுரோ அமெரிக்காவின் நியூயார்க் நகரில் சட்டம் படிக்க சென்றார். படிப்பை முடித்து கடந்த மாதம் ஜப்பான் திரும்பினார்.
இந்நிலையில் பாரம்பரிய முறையில் இல்லாமல் வழக்கமான கொண்டாட்டங்களைத் தவிர்த்து சாதாரண மக்களைப் போல் திருமணம் செய்து கொள்ள காதலர்கள் முடிவு செய்தனர். இவர்கள் திருமணம் நேற்று (26) டோக்கியோவில் இடம்பெற்றது. இதன்போது அரண்மனையிலிருந்து மகோ வெளியேறினார்.
முன்னதாக அவர் தன் பெற்றோர், இளவரசர் அகிஷினோ, இளவரசி கிகோ மற்றும் தங்கை ககோ ஆகியோரை ஆரத்தழுவி உணர்ச்சி பொங்க பிரியாவிடை பெற்றார். அப்போது அவர் மிகவும் எளிமையான ஆடை அணிந்திருந்தார். வெளிர் நீல நிற ஆடையில் தந்தை, தாய், சகோதர, சகோதரிகளை ஆரத்தழுவி விடை பெற்றார். பின் எளிமையான முறையில், கொமுரோ - மகோ திருமணம் நடந்தது.
இந்த திருமணத்தின் வாயிலாக இளவரசி அந்தஸ்தை மகோ துறந்தார். மேலும், 'அரச குடும்பத்தின் பெயரையும், தன் பெயருக்குப் பின்னால் அவர் பயன்படுத்த மாட்டார். அவரது கணவரின் குடும்பப் பெயரையே மகோ இனி பயன்படுத்துவார்' என, அறிவிக்கப்பட்டுள்ளது.
அரச குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள், சாமானியரை திருமணம் செய்து கொள்ளும் போது, 9 கோடி ரூபாய் சீதனமாக வழங்குவது வழக்கம். 'அந்த தொகை எனக்கு வேண்டாம்' என, மகோ நிராகரித்துள்ளார்.
புதுமண தம்பதியர், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் தங்கள் வாழ்க்கையை துவங்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தனர்.