
மன்னார் - மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள இலுப்பைக்கடவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கள்ளியடி பகுதியில் வசித்து வந்த வவுனியாவை சேர்ந்த நாகேந்திரன் டிலக்ஸன் (14) எனும் சிறுவன் கடந்த வெள்ளிக்கிழமை மாலை தூக்கிட்ட நிலையில் வீட்டின் சுவாமி அறையிலிருந்து சடலமாக மீட்கப்பட்டார்.
சிறுவன் கடந்த வெள்ளிக்கிழமை காலை கள்ளியடி பகுதியில் அரிசி ஆலை ஒன்றுக்கு அரிசி திரிக்க சென்ற நிலையில் அங்கு வைக்கப்பட்டிருந்த 5,000 ரூபா பணம் காணாமல் போயிருந்தது.
சிசிரிவி கமராவின் உதவியுடன் அரிசி ஆலையின் உரிமையாளர்கள் ஆராய்ந்ததில், 14 வயது சிறுவன் பணத்தை எடுத்தது தெரிய வந்தது.
இதுபற்றி சிறுவனின் உறவினர்களிடம் அரிசி ஆலை உரிமையாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டபோது, அந்த பணத்தை மீள ஒப்படைப்பதாக அவர்கள் உறுதியளித்தனர்.
எனினும், அரிசி ஆலையின் உரிமையாளரின் மகன் மற்றும் மகனின் நண்பர்கள் இருவர் என மூவர், சிறுவனின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து, சிறுவனை கடுமையாக தாக்கியுள்ளனர். சிறுவனின் சுகயீன நிலைமையை குறிப்பிட்டு, தாக்குதல்தாரிகளின் காலில் விழுந்து சிறுவனின் தாயார் மன்றாடியுள்ளார். எனினும், அந்த கும்பல் தாக்கிவிட்டே சென்றனர்.
தாக்குதல் நடத்தியவர்கள் 17, 18 வயதுடையவர்கள்.
இந்நிலையில் வீட்டில் மகனை நித்திரையாக்கி விட்டு தாயார் குளித்து விட்டு வந்த நேரம் குறித்த சிறுவனை தாக்கியவர்கள் மீண்டும் அவர்களது வீட்டில் இருந்து திடீரென செல்வதை அவதானித்து தாயார் ஓடி வந்து பார்த்த போது மகன் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததாகவும் தெரிவிக்கப்டுகின்றது.
இந்நிலையில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட இலுப்பைகடவை பொலிஸார் குறித்த மரணம் தொடர்பாக கள்ளியடி பகுதியை சேர்ந்த 16 வயது முதல் 22 வயதுடைய நான்கு பேரை கைது செய்து இலுப்பைக்கடவை பொலிஸ் நிலையத்தில் விசாரனைகளை மேற்கொண்டனர்.
இந்த நிலையில் கைது செய்யப்பட்ட குறித்த 4 பேரையும் இன்றைய தினம் (19) இலுப்பைக்கடவை பொலிஸார் மன்னார் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.
இதன்போது விசாரனைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் குறித்த 4 சந்தேக நபர்களையும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
-தமிழ் பக்கம்