வெளிநாட்டினருக்கு கட்டுப்பாடுகளுடன் உம்ரா புனித பயணத்திற்கு அனுமதி - சவுதி அரசு முடிவு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

வெளிநாட்டினருக்கு கட்டுப்பாடுகளுடன் உம்ரா புனித பயணத்திற்கு அனுமதி - சவுதி அரசு முடிவு!

கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட வெளிநாட்டினரை உம்ரா புனித பயணத்திற்கு அனுமதிக்க சவுதி அரேபியா அரசு முடிவு செய்துள்ளது. உம்ரா புனித பயணத்திற்கு மாதம் 60 ஆயிரம் பேர் அனுமதிக்கப்படுவார்கள் என்று சவுதி அரேபிய அரசுக்குச் சொந்தமான சவுதி பிரஸ் ஏஜென்சி செய்தி நிறுவனம் கூறி உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் இன்று முதல் ஏற்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டு முதல் கொரோனா கொடுந்தொற்று உலக மக்களை அச்சுறுத்தி வருகிறது. பல நாடுகள் தங்களின் எல்லைகளை மூடியுள்ளன. லாக்டவுன் அறிவிக்கப்பட்டதால் வெளிநாடுகளுக்கு செல்ல முடியாமல் பலரும் தவித்து வருகின்றனர். வெளிநாடுகளில் வேலை செய்யும் பலரும் தாய் நாடு திரும்ப முடியாமல் சிக்கியுள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு காரணமாக வெளிநாட்டு பயணிகள் வருவதற்கு 18 மாதங்களுக்கு முன்பு சவுதி அரேபிய அரசு தடை விதித்தது. சவுதி அரேபியாவில் இதுவரை 5 லட்சத்து 32 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் 8,300 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் தடுப்பூசி செலுத்திக் கொண்ட வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் சவுதி அரேபியாவுக்குள் நுழைய அனுமதிக்கப்பட்டு உள்ளனர். பைசர் மற்றும் பயோஎன்டெக் நிறுவனங்கள் இணைந்து தயாரித்த கொரோனா தடுப்பூசி, ஆக்ஸ்போர்டு ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசி, மாடர்னா தடுப்பூசி மற்றும் ஜான்சன் அண்ட் ஜான்சன் ஆகிய நிறுவனங்கள் தயாரித்த நான்கு தடுப்பூசிகளுக்கும் சவுதி அரேபிய அரசு அங்கீகாரம் வழங்கி உள்ளது.

கடந்த மாதம் தடுப்பூசி செலுத்தி கொண்ட சவுதி அரேபிய நாட்டைச் சேர்ந்த 60 ஆயிரம் பேருக்கு மட்டுமே ஹஜ் பயணம் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டது. அடுத்த ஆண்டு ஜூலை மாதம் ஏழாம் தேதி முதல் 12ம் தேதி வரை ஹஜ் பயணம் நிகழ உள்ளது.

உம்ரா புனித பயணம் மெக்கா மற்றும் மதினா ஆகிய இரு நகரங்களையும் உள்ளடக்கியது. ஹஜ் பயணம் போன்று இல்லாமல் உம்ரா பயணத்தை ஆண்டில் எப்பொழுது வேண்டுமானாலும் மேற்கொள்ளலாம். கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் தற்போது உம்ரா புனித பயணத்திற்கு சவுதி அரேபியா அரசு அனுமதி வழங்கியுள்ளது.

உம்ரா புனித பயணத்திற்கு முதலில் மாதத்துக்கு 60 ஆயிரம் பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அந்த எண்ணிக்கை ஒரு மாதத்துக்கு 20 லட்சமாக உயர்த்தப்படும் என்று சவுதி அரேபிய அரசுக்குச் சொந்தமான சவுதி பிரஸ் ஏஜென்சி செய்தி நிறுவனம் கூறி உள்ளது.

உம்ரா புனித பயணத்திற்கு இன்று முதல் விண்ணப்பிகலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. உம்ரா புனித பயணத்திற்கு வருபவர்கள் தங்களின் யாத்திரையுடன் கொரோனா தடுப்பூசி போடப்பட்ட சான்றிதழையும் சமர்பிக்க வேண்டும் என்று ஹஜ், உம்ரா புனித பயண அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா பரவலை தடுக்கும் வகையில் சவுதி அரேபியா தடை விதித்த நாடுகளில் இருந்து வருபவர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.