ஹெய்ட்டி நாட்டின் ஜனாதிபதி ஜோவெனல் மொய்ஸ் அடையாளம் தெரியாத தாக்குதலாளர்களால் அவரது இல்லத்தில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார்.
“மனிதாபிமானமற்ற மற்றும் காட்டுமிராண்டித்தனமான செயலில் ஜனாதிபதி ஜோவெனல் மொய்ஸ் அடையாளம் தெரியாத தாக்குதலாளர்களால் அவரது இல்லத்தில் இரவு சுட்டுக் கொல்லப்பட்டார்” என்று இடைக்கால பிரதமர் கிளாட் ஜோசப் புதன்கிழமை தெரிவித்தார்.
மொய்சின் மனைவி காயமடைந்து மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார் என்று ஜோசப் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
வறிய கரீபியன் நாடான ஹெய்டியில் அரசியல் ரீதியான வன்முறைகள் அதிகரித்து வரும் நிலையில் இந்த தாக்குதல் நிகழ்ந்துள்ளது. ஹெட்டி அரசியல் ரீதியாக பிளவுபட்டு, அதிகரித்து வரும் மனிதாபிமான நெருக்கடி மற்றும் உணவு பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ள நிலையில், பரவலான குழப்பம் ஏற்படும் என்ற அச்சங்கள் உள்ளன.
“அரசின் தொடர்ச்சியை உறுதிப்படுத்தவும், தேசத்தைப் பாதுகாக்கவும் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன” என்று ஜோசப் கூறினார்.
மொய்ஸ் 2017 இல் ஜனாதிபதியாக பதவியேற்றதிலிருந்து கடுமையான எதிர்ப்புகளை எதிர்கொண்டார். எதிர்க்கட்சிகள் இந்த ஆண்டு தனது ஆணையை மீறி ஒரு சர்வாதிகாரத்தை நிறுவ முற்பட்டதாக குற்றம் சாட்டியதோடு, அதிக சர்வாதிகாரமாக செயற்படுவதாக குற்றம்சாட்டின. எனினும், அவர் குற்றச்சாட்டுகளை மறுத்து வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.