முஸ்லிங்களின் மீது வன்மத்தை கக்கி உலக முஸ்லிங்களின் தலைவராக இருக்கும் முஹம்மது நபியின் வாழ்கையையும், இஸ்லாமிய வரலாற்றையும் தவறாக திரிவுபடுத்தி நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தியதன் மூலம் இலங்கை மக்களின் கோபத்தையும் தாண்டி உலகில் வாழும் 180 கோடி இஸ்லாமியர்களினதும் எதிர்ப்பை சம்பாதித்தவராக காரைதீவு தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் மாறியுள்ளார் என காரைதீவு பிரதேச சபை உறுப்பினர்கள் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்தனர்.
காரைதீவு பிரதேச சபை பிரதித்தவிசாளர் ஏ.எம். ஜாஹீரின் தலைமையிலான காரைதீவு பிரதேச சபை உறுப்பினர்களான எம்.எச்.எம். இஸ்மாயில் (ஸ்ரீ.ல.மு.கா), ஏ.ஆர்.எம். பஸ்மீர் (சுயட்சை), எம். ஜலீல் (அ.இ.ம.கா.), எம்.என்.என். றணீஸ் (ஸ்ரீ.ல.மு.கா) ஆகியோர் சம்மாந்துறை பொலிஸில் இன்று மாலை காரைதீவு தவிசாருக்கு எதிராக முறைப்பாடொன்றை பதிவுசெய்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தனர்.
பண்புள்ள, நாகரிகமான, அறிவாற்றல் உள்ள காரைதீவு மண்ணில் இப்படியான இனவாத சிந்தனை உள்ள தவிசாளர் இருப்பது வெட்கக்கேடான ஒன்றாகும். இவரை தவிசாளர் கதிரையில் இருந்து இறக்கி சிந்தனை ஆற்றல் உள்ள இன்னும் ஒரு தமிழ் சகோதரரை இந்த கதிரைக்கு அமர்த்துவதே எங்களின் பணியாகும் என்றும். தொடர்ந்தும் அபிவிருத்திகளையும் சமூகம் சார்ந்த விடயங்களையும் இனவாத கண்கொண்டு பார்த்துவரும் இவருக்கு தகுந்த பாடம் கற்பிக்கும் நேரம் வந்துள்ளது.
முஸ்லிங்களுடன் காலா காலமாக ஒற்றுமையாக இருப்பதுடன், சகோதரத்துவத்தை பேணி நடக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு சிரேஷ்ட தலைமைகள் இப்படியான நச்சு விதைகளை கட்சியை விட்டு நீக்கி சகோதரத்துவத்தை இனியும் உறுதிப்படுத்த முன்வர வேண்டும். இப்படியான இனவாத சிந்தனை கொண்டவர்களினால் மிகப்பெரும் இனக்கலவரம் உருவாக வாய்ப்புள்ளது. இவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க பொலிஸாரிடம் முறைப்பாட்டை வழங்கியுள்ளோம். இவர் விரைவில் கைதாவார் எனும் நம்பிக்கை இருக்கிறது என்றனர்.
-நூருல் ஹுதா உமர்