பொலிஸாரிடம் இருந்து தப்பிச் செல்ல முயற்சித்த நபரொருவர் உயிரிழந்ததாக நேற்று முன்தினம் (06) இரவு பொலிஸ் ஊடக பிரிவினால் செய்தி ஒன்று வெளியிடப்பட்டிருந்தது.
இது சம்பவம் தொடர்பில் வடக்கு பாணந்துறை பொலிஸ் நிலையத்தின் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவரும் மற்றும் சார்ஜென்ட் ஒருவரும் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பில் பிரதேசம் ஒன்றில் பதிவானதாக கூறப்படும் சிசிடிவி காட்சி ஒன்றை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய நிலையில் கைது செய்யப்பட்ட நபர் ஒருவர் பொலிஸ் வாகனத்தில் இருந்து பாய்ந்து தப்பிக்க முயற்சித்ததில் நேற்றைய தினம் உயிரிழந்திருந்ததாகவே பொலிஸ் ஊடக பிரிவால் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
இதில் வடக்கு பாணந்துறை, வத்தல்பொல பிரதேசத்தை சேர்ந்த 42 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
குறித்த நபர் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லும் வழியில் தப்பிக்க முயற்சித்ததாகவும், இதன்போது படுகாயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று மாலை இவ்வாறு உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸ் செய்தி தொடர்பாளர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
அதேவேளை, உயிரிழந்த நபரின் மனைவி, தனது கணவர், பொலிஸாரின் வாகனத்தில் இருந்து குதிக்கவில்லை என்று கூறியுள்ளார்.
மாறாக அவரை கைது செய்த பொலிஸாரினால் தாக்கப்பட்டார், இதனால் அவரது மரணம் ஏற்பட்டது என்னை மேலும் தெரிவித்துள்ளார்.