ஈஸ்டர் ஞாயிறு தின தொடர் தற்கொலை தாக்குதல்கள் குறித்த விசாரணைகளுக்காக கைது செய்யப்பட்டு சமூகங்களிடையே வெறுப்புணர்வை தூண்டியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள சிரேஷ்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் குறித்தான விவகாரத்தில் கைது செய்யப்பட்ட இரு மெளலவி ஆசிரியர்கள் தாக்கல் செய்துள்ள அடிப்படை உரிமை மீறல் மனு இன்று (08) பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
கைது, தடுத்து வைப்புக்கு எதிராக 26,27 வயதுடைய மொஹம்மட் ஜவ்பர் லுக்மான் ஹகீம், மொஹம்மட் நசுருத்தீன் மொஹம்மட் வசீர் ஆகிய மெளலவி ஆசிரியர்கள் இந்த மனுவை, சட்டத்தரணி பாலசூரிய ஊடாக தாக்கல் செய்திருந்த நிலையில், இன்று அம்மனு நீதியர்சர்களான விஜித் மலல்கொட, எல்.டி.பி. தெஹிதெனிய மற்றும் எஸ். துரைராஜா ஆகியோர் முன்னிலையில் பரிசீலிக்கப்பட்டது.
இதன்போது மனுதாரர்கள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் ஆஜரானதுடன், பொறுப்புக் கூறத்தக்க தரப்பாக பெயரிடப்பட்டிருந்த சிஐடி. பிரதானி, பொலிஸ் மா அதிபர் உள்ளிட்டவர்கள் சார்பில் சிரேஷ்ட அரச சட்டவாதி கலாநிதி அவந்தி பெரேரா ஆஜரானார்.
இதன்போது பொறுப்புக் கூறத்தக்க தரப்பாக பெயரிடப்பட்டுள்ளவர்களிடம் இது குறித்து ஆலோசனையைப் பெற வேண்டும் எனவும் அதற்காக கால அவகாசம் தருமாரும் சிரேஷ்ட அரச சட்டலாதி அவந்தி பெரேரா கூறினார்.
இதனை ஏற்றுக் கொண்ட உயர் நீதிமன்றம் மனு மீதான பரிசீலனைகளை எதிர்வரும் 21 ஆம் திகதிக்கு ஒத்தி வைத்தது.
மேலும், குறித்த மனு தாக்கல் செய்யப்ப்ட்ட பின்னணியை விளக்கிய ஜனாதிபதி சட்டத்தரனி சுமந்திரன், குறித்த இருவரும் சிஐ.டி.யில் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது, பல போராட்டங்களின் பின்னர் கடந்த ஏபரல் 31 ஆம் திகதி சட்டத்தரணி பாலசூரிய அவர்களைச் சந்திக்க சென்றதாக சுட்டிக்காட்டினார்.
அப்போது, அவ்விருவரும் சட்டத்தரணியிடம், தாம் அல் சுஹைரியா மத்ரஸா பாடசாலையில் கடமையாற்றும் போது, அங்கு ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் என்பவர் ஸஹ்ரானுடன் வருகை தந்ததாக வாக்குமூலமளிக்க தம்மை அதிகாரிகள் கட்டாயபப்டுத்துவதாகவும் அவ்வாறு கூறினால் விடுவிப்பதாக கூறுவதாகவும் முறையிட்டுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் உயர் நீதிமன்றின் அவதானத்துக்கு கொண்டு சென்றார்.
-எம்.எப்.எம்.பஸீர்