கனடாவில் ஒரு நபர் பிக் அப் வாகனமொன்றை செலுத்திச் சென்று மக்கள் மீது மோதியதால், முஸ்லிம் குடும்பமொன்றைச் சேர்ந்த நால்வர் கொல்லப்பட்டுள்ளனர் என அதிகாரிகள் திங்கட்கிழமை தெரிவித்துள்ளனர்.
வெறுப்புணர்வினால் தூண்டப்பட்டு திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல் இது என பொலிஸாரும் ஏனைய அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர்.
கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்திலுள்ள லண்டன் நகரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (06) இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் அதிகாரி பேல் வெய்ட் தெரிவித்துள்ளார்.
20 வயதான சந்தேக நபர், சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றிருந்தார். அவர், கவச உடை போன்ற உடை அணிந்திருந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். எனினும், அன்று மாலை வேளையே கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் பொலிஸ் அதிகாரி பேல் வெய்ட் தெரிவித்துள்ளார்.
இந்நடவடிக்கையானது வெறுப்புணர்வினால் உந்தப்பட்டு, முன்கூட்டியே திட்டமிடப்பட்டதாகும் என்பதற்கு ஆதாரம் உள்ளது. இவர்கள் முஸ்லிம்கள் என்பதாலேயே இலக்கு வைக்கப்பட்டுள்ளனர் என நம்ப்படுகிறது எனவும் செய்தியாளர் மாநாடொன்றில் அவர் கூறினார்.
இது இஸ்லாமோபோபியாவின் (இஸ்லாம் மீதான அச்சம்) பயங்கர நடவடிக்கை என கனடாவின் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் பில் பிளெயர் கூறியுள்ளார்.
இக்குடும்பத்தினர் அவர்களின் மத நம்பிக்கை காரணமாகவே இலக்கு வைக்கப்பட்டுள்ளனர். தாக்குதல் மேற்கொண்டவர் முஸ்லிம்கள் மீதான தனது வெறுப்புணர்வினால் தூண்டப்பட்டுள்ளார் எனவும் அமைச்சர் பில் பிளெயர் கூறியுள்ளார்.
கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இது தொடர்பாக கூறுகையில், "நாம் உங்களுடன் இருக்கிறோம் என்பதை லண்டனிலும் நாடு முழுவதிலும் உள்ள முஸ்லிம்கள் தெரிந்து கொள்ளுங்கள். இஸ்லாமோ போபியாவுக்கு (இஸ்லாம் மீதான அச்சம்) எமது சமூகத்தில் இடமில்லை. இத்தாக்குதல் நயவஞ்சகமான செயற்பாடு. இது நிறுத்தப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.