அது எந்த நிலைமையாக இருப்பினும் சரியே! சவாலை ஏற்றுக்கொள்ள நாம் தயார்! -பிரதமர்

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அது எந்த நிலைமையாக இருப்பினும் சரியே! சவாலை ஏற்றுக்கொள்ள நாம் தயார்! -பிரதமர்


தொற்று நிலைமையாக இருப்பினும், அனர்த்த நிலைமையாயினும் எந்த சூழ்நிலைகளிலும் மக்களுடன் அந்த சவாலை ஏற்றுக்கொள்ள ஒரு அரசாங்கம் என்ற ரீதியில் நாம் தயார் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (07) அலரி மாளிகையில் வைத்து தெரிவித்தார்.


பயணத்தடையின் போது மக்களுக்கு பல்வேறு பிரச்சினைகள் ஏற்படும் என அறிந்த போதிலும் ஒரு உயிரின் மதிப்பறிந்து அரசாங்கம் முன்னெடுத்துவரும் வேலைத்திட்டங்களுக்கு ஆதரவளிக்குமாறு இதன்போது பிரதமர் மக்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.


புதிய களனி பாலம் முதல் அத்துருகிரிய வரையான 16.4 கிலோமீற்றர் நீளமான அதிவேக நெடுஞ்சாலை மற்றும் கெடம்பே, கொஹுவல, கொம்பனித்தெருவில் நீதிபதி அக்பர் மாவத்தை மற்றும் உத்தரானந்த மாவத்தை, பாலதக்ஷ மாவத்தை மற்றும் சிற்றம்பலம் ஏ கார்டினர் மாவத்தை ஆகிய இடங்களில் நிர்மாணிக்கப்படும் 06 மேம்பாலங்களின் பணிகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.


அலரி மாளிகையில் இருந்தவாறு குறித்த வேலைத்திட்டங்களின் ஆரம்ப நிகழ்வு பிரதமரின் தலைமையில் காணொளி தொழில்நுட்பம் ஊடாக இடம்பெற்றது.


அங்கு பிரதமர் ஆற்றிய முழுமையான உரையில் கொழும்பு மற்றும் கண்டி வாகன நெரிசலுக்கு தீர்வு காணும் திட்டங்களையே இன்று ஆரம்பித்துள்ளோம். இவ்விடங்களில் காணப்படும் வாகன நெரிசல் தொடர்பில் பலர் வரலாற்றில் எத்தனை கலந்துரையாடல்களை மேற்கொண்டனர்? என்பதை நீங்கள் அறிவீர்கள். வாகனங்களின் வரிசை நாளுக்கு நாள் நீண்டுக்கொண்டே சென்றதே தவிர எவரும் இதற்கு நடைமுறை தீர்வு வழங்கவில்லை.


காலம் என்பது எம் அனைவருக்கும் முக்கியமானதாகும். மக்களுக்கு போன்றே இறுதியில் அது நாட்டிற்கும், நாட்டின் எதிர்காலத்திற்கும் ஒரே மாதிரி முக்கியம் என்பதையும் நீங்கள் அறிவீர்கள். வாகன நெரிசலினால் பொதுமக்களுக்கு வீதியில் செலவிடும் காலத்தை குறைத்து, அக்காலத்தை ஏதேனும் முக்கியமான விடயத்திற்கு பயன்படுத்த முடியுமாயின் அதை நாம் பெற்ற வெற்றியாக நான் பார்க்கின்றேன்.


இன்று நாம் ஆரம்பிக்கும் திட்டங்களுள் முழுமையாக தூண்களின் மீது நிர்மாணிக்கப்படும் இந்நாட்டின் 8ஆவது அதிவேக நெடுஞ்சாலை திட்டமும் உள்ளடங்கும். அந்த அதிவேக நெடுஞ்சாலை புதிய களனி பாலத்திலிருந்து அத்துருகிரிய வரை நிர்மாணிக்கப்படும்.


நான்கு வழிப்பாதை அதிவேக நெடுஞ்சாலை எமது நாட்டின் முதலாவது மற்றும் இரண்டாவது அதிவேக நெடுஞ்சாலைகளை ஒன்றுடனொன்று இணைப்பது விசேட அம்சமாகும். அத்துடன் தெமடகொட, ராஜகிரிய, கொஸ்வத்த மற்றும் ஹோகந்தர உள்ளக பரிமாற்றம் நிர்மாணிக்கப்படும் போது, கொழும்பு வாகன நெரிசலிலிருந்து கணிசமான அளவில் எமக்கு குறைக்க முடியும்.


இந்த அதிவேக நெடுஞ்சாலையில் 15 ஆண்டு கால செயல்பாடு மற்றும் பராமரிப்பு உள்ளிட்ட கட்டுமானத்திற்கு வரையறுக்கப்பட்ட சைனா ஹாபர் பொறியியலாளர் நிறுவனம் சுமார் 135 பில்லியன் ரூபாய் நிதியை செலவிட்டுள்ளது. அவர்களுக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.


சுபீட்சத்தின் நோக்கு கொள்கைக்கு அமைய நாம் நாட்டை கட்டியெழுப்ப மக்களுக்கு உறுதியளித்தோம். கொவிட் தொற்றுக்கு மத்தியிலேனும் நாட்டின் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை நிறுத்த வேண்டாம் என ஜனாதிபதி எம் அனைவருக்கும் ஆலோசனை வழங்கியுள்ளார்.


இந்த தொற்று நிலைமை எதுவும் இல்லாமலேயே இன்று உள்ள எதிர்க்கட்சி அன்று எந்தவொரு வேலையும் செய்யாதிருந்தது. நாம் என்ன செய்;கின்றோம் என இன்று அவர்கள் எம்மிடம் கேட்கின்றனர்.


ஒரு பொறுப்புள்ள அரசாங்கமாக நாங்கள் மக்களுக்கு தடுப்பூசிகளைக் வழங்வோம் என்று உறுதியளித்தோம். தடுப்பூசி மூலம் எங்கள் மக்களைப் பாதுகாக்கும் திட்டத்தை நாங்கள் தொடர்ந்து செயல்படுத்துகிறோம். சில குறைபாடுகளை சரிசெய்ய முன்வந்துள்ளோம். இந்த தொற்றுநோயைக் கட்டுப்படுத்த வைத்தியர்கள் உள்ளிட்ட மருத்துவ ஊழியர்கள், முப்படையினர், காவல்துறை மற்றும் அதை ஆதரிக்கும் மக்கள் பெரும் தியாகங்களைச் செய்கிறார்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள்.


சிலருக்கு அதனை சகித்துக்கொள்ள முடியாது. அவர்கள் இங்கேயும் அங்கேயும் சொல்லி அதை நாசப்படுத்த முயற்சிக்கின்றனர். தவறான பிரசாரங்களை மேற்கொள்கின்றனர். தடுப்பூசி போடும்போது அவர் இறந்துவிடுவார் என்றும் கூறினர். மக்களை பயமுறுத்த முயன்றனர். எதிர்க்கட்சிக்கு நாம் சொல்வது இதுபோன்ற பொய்களை பரப்பி மக்களின் வாழ்க்கையை நாசமாக்கி அரசியல் ஆதாயம் தேட வேண்டாம். இந்த தொற்று நம் அனைவருக்கும் ஒரு சவால். இந்த சவாலை சமாளிக்க நாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.


எதிர்க்கட்சியின் சில உறுப்பினர்கள் தங்கள் சமூக ஊடகங்களில் அரசாங்கத்தின் தடுப்பூசி திட்டத்தை பாராட்டுவதை நான் கண்டேன். இந்த நேரத்தில் இந்த சவாலை ஒன்றிணைந்து எதிர்கொள்வதையே நாட்டு மக்களும் நம்புகிறார்கள்.


பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் போது, பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வார்கள் என்பதை நாங்கள் அறிவோம். ஆனால் உங்கள் அனைவரின் உயிரையும் மதிக்கிறோம். எனவே, அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் திட்டத்திற்கு மக்கள் தங்கள் ஆதரவை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம். உங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் அதேவேளை உங்கள் அன்புக்குரியவர்களைப் பாதுகாக்கவும். பின்னர் முழு நாடும் பாதுகாக்கப்படும்.


தொற்று நிலைமையாக இருப்பினும், அனர்த்த நிலைமையாயினும் இந்த சூழ்நிலைகளிலும் மக்களுடன் அந்த சவாலை ஏற்றுக்கொள்ள ஒரு அரசாங்கம் என்ற ரீதியில் நாம் தயார். மக்களுக்கு முறையான சாலை வசதிகளை வழங்க நாங்கள் பணியாற்றி வருகிறோம். இன்றைய நிலையை விட எதிர்காலத்தை நோக்கி நாம் அதிகமாகப் பார்க்கிறோம்.


சிரமங்கள் இருந்தபோதிலும், நெடுஞ்சாலை அமைச்சு தற்போது ஒரு பெரிய திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. நமது அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ அதற்கு தலைமை தாங்குகிறார். அந்த வேலை சிறப்பாக நடைபெற்று வருகிறது. இராஜாங்க அமைச்சர் நிமல் லன்சா, அமைச்சின் செயலாளர், இராஜாங்க அமைச்சின் செயலாளர் மற்றும் வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் அனைத்து உறுப்பினர்களும் இதற்கு நல்ல உத்வேகம் தருவார்கள் என்பதை நாங்கள் அறிவோம். அதனால்தான் சமீபத்தில் மத்திய அதிவேக நெடுஞ்சாலை மற்றும் ருவன்புர அதிவேக நெடுஞ்சாலையில் பணிகளைத் தொடங்க முடிந்தது.


அது மட்டுமல்லாமல், இன்று பணிகள் ஆரம்பிக்கப்பட்ட கொம்பனித்தெஐரு மேம்பாலம், கொஹுவல மற்றும் நீதிபதி அக்பர் மாவத்தை மேம்பாலம் இரண்டு மற்றும் கண்டி கெடம்பே மேம்பாலம் கட்டுமானங்களை விரைவில் நிறைவுசெய்ய எதிர்பார்ப்பதாக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார்.


இதற்கான நிதி உதவிகளை நல்கும் ஹங்கேரி அரசாங்கத்திற்கும், அதில் செயற்பாட்டு ரீதியில் சம்பந்தப்பட்டு இந்த திட்டங்களை மிகக் குறுகிய காலத்தில் நிறைவுசெய்ய திட்டமிட்ட உள்ளூர் பொறியியலாளர்கள் மற்றும் ஒப்பந்தக்காரர்களுக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் அவ் அமைச்சு அர்ப்பணிப்புடன் மேற்கொள்ளும் பணிகளை இச்சந்தர்ப்பத்தில் பாராட்டுகளை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன் ´என்று கௌரவ பிரதமர் கூறினார்.


நெடுஞ்சாலை அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, ஆளுநர் பார்ன்ஸ் அவர்களின் பின்னர் இந்நாட்டில் நெடுஞ்சாலை புரட்சி ஏற்படின் அது பிரதமர் அவர்களே, அது நீங்கள் ஜனாதிபதியாக சேவையாற்றிய காலத்திலேயே ஆகும். நீங்களே கொழும்புக்கு மாத்திரம் மட்டுப்பட்டிருந்த கார்பட் வீதிகளை மூலை முடுக்கெல்லாம் கொண்டு சென்று சேர்த்து 12000 கிலோமீற்றர், 13000 கிலோமீற்றர் வரை யுத்தம் இடம்பெறும் போதே இந்நாட்டின் அடிப்படை வசதிகளை அபிவிருத்தி செய்த தலைவர்.


அதிவேக நெடுஞ்சாலை கலாசாரத்தை ஏற்படுத்திய, அறிமுகப்படுத்திய தலைவர் நீங்களே. நீங்கள் 2015 இல் தோல்வியடையாது இருந்திருப்பின் இந்த நெடுஞ்சாலைகள் அனைத்தும் அமைக்கப்பட்டு, இந்த மேம்பாலங்கள் நிர்மாணிக்கப்பட்டு பாரிய அபிவிருத்தியை ஏற்படுத்தியிருக்க முடியும்.


கொவிட் தொற்று நிலைமையின்போது அந்த சவால்களுக்கு முகங்கொடுத்து இந்நாட்டின் பொருளாதாரத்தை பலப்படுத்த, நாட்டின் அடிப்படை வசதிகளை அபிவிருத்தி செய்ய மிகுந்த அர்ப்பணிப்புடன் சேவையாற்றும் அதிமேதகு ஜனாதிபதி அவர்களை இச்சந்தர்ப்பத்தில் நினைவு கூருகின்றேன். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் சுபீட்சத்தின் நோக்கு உங்களது மஹிந்த சிந்தனையில் காணப்பட்ட வேலைத்திட்டங்களை அதேபோன்று புதுப்பிக்கப்பட்ட வேலைத்திட்டம் சுபீட்சத்தின் நோக்கில் உள்ளடங்கியுள்ளது.


கௌரவ பிரதமர் அவர்களே, இந்த திட்டம் அமைச்சரவையின் அனுமதிக்கப்பட்ட பின்னர் வீதிகள் சீனர்களுக்கு ஒப்படைக்கப்பட்டுவிட்டது என எதிர்க்கட்சி கூறியது. அன்று நீங்கள் இந்த துறைமுக நகருக்கு அடிக்கல் நாட்டிய போது அன்றும் முழு நிலமும் சீனர்களுக்கு வழங்கப்பட்டு விட்டதாக கூறப்பட்டது.


ஆனால்; நீங்கள் அவ்வாறு செய்யவில்லை. மிகச் சிறந்த நிர்வாகத்துடன் பொருளாதாரத்தை வழிநடத்தி, இந்த நாட்டின் எதிர்காலத்திற்கான உட்கட்டமைப்பை உருவாக்கிய தலைவர் நீங்கள். இந்த நாட்டின் வளங்களை விற்ற ஒரு தலைவராக நீங்கள் இருந்ததில்லை.


ஆனால், உங்களுக்கு சேறு பூசிய எதிர்க்கட்சி ஆட்சிக்கு வந்து, நீங்கள் மிகவும் அன்புடன் கட்டிய ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு வழங்கியது. நீங்கள் இருந்திருந்தால் அது ஒருபோதும் நடந்திருக்காது என்பது எங்களுக்கு தெரியும்.


அதனால் இன்றும் அவர்கள் சேறு பூசும் செயற்பாட்டைளே மேற்கொண்டு வருகின்றனர். நீங்கள் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையை நிர்மாணிக்கும்போது, ராஜபக்ஷர்களுக்கு பால் மற்றும் தேனை கொண்டு வருவதற்காகவே அதிவேக நெடுஞ்சாலை கட்டப்பட்டதாக கூறினார்கள்.


இந்த திட்டம் தொடங்கப்பட்டபோது அது சீனர்களுக்கு வழங்கப்பட்டது என்று கூறப்பட்டது. முடிந்தவரை சேறு பூசவே முயற்சிக்கின்றனர்.


அன்று 2015 இற்கு முன்னர் நீங்கள் அவமதிக்கப்பட்டு, உங்கள் குடும்பம் அவமதிக்கப்பட்டு, அவர்கள் அரச அதிகாரத்தை கைப்பற்றிய பின்னர் உங்களிடமும் உங்கள் குடும்பத்தினரிடமும் பழிவாங்கிய விதத்தை புதிதாக கூறவேண்டியதில்லை. பழிவாங்கல், வளங்களை விற்பனை செய்ததை தவிர அவர்கள் இந்நாட்டிற்காக செய்தது ஒன்றும் இல்லை.


கிராமப்புற சாலைகள் மற்றும் பிற உற்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சர் நிமல் லன்சா, இந்த நெரிசலை குறைப்பது தொடர்பதற்கான திட்டம் எப்போது ஆரம்பிக்கப்பட போகின்றது எனவே அதிமேதகு ஜனாதிபதி அவர்கள் எப்போதும் கேட்பார். இந்த சாலைகளில் பெரும்பாலானவை வெளிநாட்டு கடன் உதவி ஒப்பந்தங்களின் கீழ் செயற்படுத்தப்படுகின்றன. அதனால் இவை தாமதிக்கப்படுவது என்றால் இந்த மக்களின் பணத்தையே இறுதியில் செலுத்த வேண்டும்.


கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் இந்த திட்டங்களைத் திட்டமிட்டார்.


மஹிந்த சிந்தனையின் கீழ் அன்று திட்டமிடப்பட்டு 2015இல் ஆரம்பிக்கப்படவிருந்த நிலையிலேயே எமது அரசாங்கம் தோல்வியடைந்தது.


ஆனால் அதன் பின்னர் நல்லாட்சி அரசாங்கம் 5 ஆண்டுகளில் நாட்டை ஒரு தரிசு நிலமாக மாற்றியது.


ஆனால் யுத்தம் நிறைவடைந்த பின்னர் கௌரவ மஹிந்த ராஜபக்ஷ அவர்களில் காலப்பகுதியில் உலகில் அபிவிருத்தியடைந்த நாடுகளில் உள்ள சாலை அமைப்புக்கு சமானமான சாலை அமைப்பை இலங்கையில் நிர்மாணிக்க முடிந்தது. அதிவேக நெடுஞ்சாலை மாத்திரமன்றி அனைத்து சாலைகளும் கார்பட் அல்லது கொங்கிரீட் செய்வது வரை அபிவிருத்தி செய்யப்பட்டது.


குறித்த சந்தர்ப்பத்தில் அமைச்சர்களான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, தினேஷ் குணவர்தன, கெஹெலிய ரம்புக்வெல, மஹிந்தானந்த அளுத்கமகே, பந்துல குணவர்தன, காமினி லொகுகே, உதய கம்மன்பில, சரத் வீரசேகர, இராஜாங்க அமைச்சர்களான நிமல் லன்சா, சுசில் பிரேமஜயந்த, திலும் அமுனுகம, லொஹான் ரத்வத்த, அனுராத ஜயரத்ன, பிரசன்ன ரணவீர, பாராளுமன்ற உறுப்பினர்களான மதுர விதானகே, ஜகத் குமார, யாதமினி குணவர்தன, திலக் ராஜபக்ஷ, மேல் மாகாண ஆளுநர் ரொஷன் குணதிலகே, மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ கமகே, பிரதமரின் செயலாளர் காமினி செனரத், நெடுஞ்சாலை அமைச்சின் செயலாளர் ஆர்.டபிள்யு.ஆர்.பிரேமசிறி, வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் சமிந்த அதுலுவகே உள்ளிட்ட அரச அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.