நாட்டில் தற்போது காணப்படுகின்ற நிலைமைக்கு மத்தியில் பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது குறித்து இதுவரை எந்தவொரு தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பான தீர்மானங்கள் குறித்து கல்வியமைச்சர் ஜீ.எல் பிரிஸ் இன்று (07) இதனை குறிப்பிட்டுள்ளார்.
பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்படுவதற்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளியாகியிருந்தன.
இந்நிலையில், இது தொடர்பில் கருத்து வெளியிட்ட போதே, அமைச்சர் இன்று இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், தற்போதைய நிலைமைக்கு மத்தியில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்ற போதிலும், அது தொடர்பில் இறுதித் தீர்மானமொன்று மேற்கொள்ளப்படவில்லை என கல்வி அமைச்சர் ஜீ.எல் பீரிஸ் மேலும் குறிப்பிட்டார்.
இதேவேளை, நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணத்தடை காரணமாக பாடசாலை போக்குவரத்து சேவையாளர்கள் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளதாக அகில இலங்கை பாடசாலை போக்குவரத்து சங்கம் தெரிவித்துள்ளது.
அகில இலங்கை பாடசாலை போக்குவரத்து சங்கத்தின் தலைவர் மல்ஶ்ரீ டி சில்வா இன்று ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளார்
நாட்டின் தற்போதைய நிலையில் பாடசாலை போக்குவரத்து சேவையில் ஈடுபட்டுள்ளவர்கள் தமது அடிப்படை வருமானத்தினை இழந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், இவ்வாறு வருமானத்தை இழந்துள்ளவர்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவு இதுவரை வழங்கப்படவில்லை எனவும் அகில இலங்கை பாடசாலை போக்குவரத்து சங்கத்தின் தலைவர் மல்ஶ்ரீ டி சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.