பலத்த மழையுடனான காலநிலை; நாட்டின் 9 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பலத்த மழையுடனான காலநிலை; நாட்டின் 9 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை!


நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் குறிப்பாக மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் தற்போது நிலவும் மழையுடனான வானிலை மேலும் தொடரும் சாத்தியம் காணப்படுவதாக இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. 


குறித்த பிரதேசங்களில் நாளை (04) 150 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதன் காரணமாக நேற்று களுத்துறை மாவட்டத்தில் 200 மில்லி மீற்றருக்கு அதிக மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இந்நிலையில் 150 மில்லி மீற்றருக்கும் அதிக மழை வீழ்ச்சி பதிவாகக் கூடும் என்று 9 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதோடு, 6 மாவட்டங்களுக்கு மண் சரிவு அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.


கண்டி, கம்பஹா, கொழும்பு, களுத்துறை, காலி, கேகாலை, இரத்தினபுரி, மாத்தறை மற்றும் நுவரெலியா ஆகிய 9 மாவட்டங்களிலும் 150 மில்லி மீற்றருக்கும் அதிக மழை வீழ்ச்சி பதிவாகக் கூடும் என்று இலங்கை வளிமண்டலவியல் திணைக்களத்தினால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று வியாழக்கிழமை அதிகாலை 1.00 மணி முதல் நாளை வெள்ளிக்கிழமை காலை 8.30 வரை இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது


எனவே குறித்த மாவட்டங்களில் துரிதமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. இதேவேளை பதுளை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களில் அவதானமாக செயற்பட வேண்டும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.


அதேநேரம், கொழும்பு , காலி, களுத்துறை, மாத்தறை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களிலுக்கு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தினால் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


அதற்கமைய கொழும்பில் சீதாவாக்கை பிரதேச செயலகப்பிரிவிற்கும் , காலியில் நெலுவ பிரதேச செயலகப்பிரிவிற்கும் , களுத்துறையில் பாலிந்தநுவர மற்றும் புளத்சிங்கள பிரதேச செயலகப்பிரிவுகளுக்கும் , மாத்தறையில் பிட்டபெத்தர பிரதேச செயலகப்பிரிவிற்கும் , நுவரெலியாவில் வலப்பனை பிரதேச செயலகப்பிரிவிற்கும் , இரத்தினபுரியில் அயகம, குருவிட்ட, எஹெலியகொட மற்றும் கலவான ஆகிய பிரதேச செயலகப்பிரிவுகளுக்கும் இவ்வாறு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


அதேநேரம், மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 150 மி.மீ அளவான மிகப் பலத்த மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.


நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.


புத்தளம் தொடக்கம் கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பந்தோட்டை வரையான கடற் பிரதேசங்களில் இடைக்கிடை மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும். நாட்டை சூழவுள்ள கடற்பிராந்தியங்களில் மேற்கு திசையிலிருந்து தெற்கு திசை நோக்கி காற்று வீசும். இதன் போது காற்றின் வேகம் 30 - 40 கிலோ மீற்றராகக் காணப்படும். அத்தோடு காலியிலிருந்து ஹம்பந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையும் மற்றும் மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையான கடற் பிராந்தியங்களில் காற்றின் வேகமானது 50 - 55 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும். 


இவ்வாறான செயற்பாடுகளில் கடற்சார் செயற்பாடுகளில் ஈடுபடுவதை தவிர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.



Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.