கொழும்பு துறைமுக நகரில் முதலீடுகளை மேற்கொள்ள முன்வருமாறு சர்வதேச நாடுகளிலுள்ள முதலீட்டாளர்களிடம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார்.
ஜப்பானின் டோக்கியோ நகரில் ஆரம்பமாகியுள்ள ஆசியாவின் எதிர்காலம் தொடர்பான 26 ஆவது சர்வதேச மாநாட்டில் காணொளி தொழில்நுட்பத்தினூடாக கலந்துகொண்ட போதே ஜனாதிபதி இந்த கோரிக்கையை முன்வைத்தார்.
இதேவேளை, சீனாவிடமிருந்து 14 மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகளை இலங்கைக்கு கொள்வனவு செய்ய முன்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அவற்றில் 3 மில்லியன் தடுப்பூசிகள் எதிர்வரும் ஜூன் மாதமளவில் நாட்டிற்கு கிடைக்கவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதேவேளை, சீன அரசாங்கம் மேலும் 5 இலட்சம் சினோபார்ம் தடுப்பூசிகளை இலங்கைக்கு நன்கொடையாக வழங்க தீர்மானித்துள்ளது.
நன்கொடையாக வழங்கப்படவுள்ள 5 இலட்சம் தடுப்பூசிகள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நாட்டிற்கு கொண்டுவரப்படவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சீன அரசாங்கத்தின் இந்த தீர்மானங்களை இலங்கைக்கான தூதுவர் ஜனாதிபதிக்கு நேற்று அறிவித்ததாகவும் அரசாங்க தகவல் திணைக்களத்தினால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.