இந்தியாவின் தூத்துக்குடி பகுதியில் இருந்து கடல் மார்க்கமாக நாட்டுக்குள் பிரவேசித்த மற்றுமொரு பெண், நீர்கொழும்பு - கொச்சிக்கடை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் இந்தியாவில் இருந்து நாட்டுக்குள் பிரவேசித்த நிலையில் நேற்று கைது செய்யப்பட்ட பெண் மற்றும் சிறுவர்களுடன் நாட்டுக்கு வந்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
34 வயதான குறித்த பெண்ணுடன் 13 மற்றும் 4 வயதுகளை உடைய இரண்டு சிறுவர்களும் புத்தளம் - வேப்பமடு பகுதியில் வைத்து நேற்று கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் அவர்கள் தற்போது கொரோனா பரிசோதனைகளுக்காக புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, இந்திய பிரஜைகள் நாட்டுக்குள் நுழைவதற்கு முயற்சிப்பது தொடர்பான தகவல்கள் கிடைத்துள்ளதாக கடற்றொழில் துறைமுகங்கள் அபிவிருத்தி, பல நாள் கடற்றொழில் அலுவல்கள் மற்றும் மீன் ஏற்றுமதி இராஜாங்க அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் அவதானமாக செயற்படுமாறு தாம் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மிரிஸ்ஸ கடற்பகுதியில் நேற்று ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே இராஜாங்க அமைச்சர் கஞ்சன விஜேசேகர இதனை குறிப்பிட்டுள்ளார்.