தாக்குதலில் மட்டும் 20க்கும் மேற்பட்டர் உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஹமாஸ் அமைப்பினரின் ஜெருசலேம் தாக்குதலை அடுத்து, இஸ்ரேல் காஸா மீதான வான்வழித் தாக்குதலைத் தீவிரப்படுத்தி இருக்கிறது.
இஸ்ரேல் - பாலஸ்தீன மோதல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. கடந்த திங்கள்கிழமை அன்று இருதரப்பினருக்கும் இடையே வெடித்த மோதலில் இதுவரை பச்சிளம் குழந்தைகள், பெண்கள் உட்பட 200-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். காஸாவின் மசூதியில் ஆரம்பித்த வன்முறையானது தற்போது ஜெருசலேம் வரையிலும் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. காஸாவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் ஹமாஸ் அமைப்பினரைக் குறி வைத்துள்ள இஸ்ரேல் அவர்கள் மீது தொடர்ச்சியாக ஏவுகணைகளை ஏவித் தாக்குதல் நடத்தி வருகிறது. பதிலுக்கு ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் 20-க்கும் மேற்பட்டர் உயிரிழந்துள்ளனர்.
5 நாள்களாகத் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கும் இஸ்ரேல் - பாலஸ்தீன மோதல் சர்வதேச அளவில் பேசுபொருளாக மாறியிருக்கிறது. இரு தரப்பினரும் மோதலை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று சர்வதேச நாடுகள் பலவும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில், உலக நாடுகளின் தொடர் அழுத்தத்தைக் கருத்தில் கொண்டு இரு தரப்பினரும் மோதலைக் கைவிடும் முயற்சிகளில் நேற்றிரவு முதல் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டது.
இருப்பினும், மோதல் இன்றும் அதே வீரியத்துடனே தொடர்ந்தது. ஆயுத பலம் மற்றும் அதிகார பலம் வாய்ந்த இஸ்ரேல் 6 லட்சத்திற்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட காஸா நகரத்தைத் தொடர்ந்து ராக்கெட் ஏவுகணைகள் மூலம் தரைமட்டமாக்கிக் கொண்டிருக்கிறது.
இன்று இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் மட்டும் 20-க்கும் மேற்பட்டர் உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஹமாஸ் அமைப்பினரின் ஜெருசலேம் தாக்குதலை அடுத்து, இஸ்ரேல் காஸா மீதான வான்வழித் தாக்குதலைத் தீவிரப்படுத்தி இருக்கிறது. இந்நிலையில், காஸாவில் இயங்கி வரும் பிரபல செய்தி நிறுவனமான அல் - ஜசீரா மற்றும் இதர சில செய்தி நிறுவனங்களின் அலுவலகங்களைக் குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் அனைத்து கட்டடங்களும் தரைமட்டமாக்கபட்டுள்ளது.
அல் - ஜசீரா மற்றும் அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு காஸாவில் இயங்கி வரும் அஸோஸியேடட் பிரஸ் ஆகிய செய்தி நிறுவனங்களின் கட்டடங்களைக் குறி வைத்த இஸ்ரேல் ராணுவத்தினர் கட்டடங்களிலிருந்து அனைவரையும் வெளியேறுமாறு கூறியுள்ளனர்.
பத்திரிகையாளர்கள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் வெளியேறிய பின்னர் சுமார் அரை மணி நேரம் கழித்து ராணுவத்தினர் வான்வழித் தாக்குதல் மூலமாகச் செய்தி நிறுவனங்களின் அலுவலக கட்டடங்களை ஏவுகணைகள் ஏவி தரைமட்டமாக்கினர். சுமார் 11 கட்டடங்கள் இந்த வான்வழித் தாக்குதலில் தரைமட்டமாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. தாக்குதலின் போது வானுயர எழுந்த தூசியால் காஸா நகரம் புகைமூட்டமாகக் காட்சி அளித்தது. இஸ்ரேலின் இந்த தாக்குதலால் காஸாவில் பதற்றம் அதிகரித்துள்ளது.செய்தி நிறுவனங்கள் மீதான இஸ்ரேலின் மிக மோசமான தாக்குதலுக்குக் கண்டனங்கள் குவிந்து வருகின்றன.
-விகடன்