இலங்கையில் புதிய அதிவேக நெடுஞ்சாலை ஒன்றுக்கான கட்டுமானப் பணிகளை சீன நிறுவனமொன்றிற்கு வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
குறித்த கட்டுமானப் பணிக்காக கிடைக்கப்பெற்ற கேள்வி அறிவித்தல்களில் சீன நிறுவனம் சமர்ப்பித்த கேள்வி அறிவித்தல் பொருத்தமானதாக காணப்பட்ட காரணத்தின் அடிப்படையில் குறித்த நிறுவனம் தெரிவு செய்யப்பட்டதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
சுற்றுவட்ட அதிவேக நெடுஞ்சாலையில், அத்துருகிரிய இடைநிலை மாறல் பகுதியிலிருந்து இராஜகிரிய வழியாக புதிய களனி பாலம் வரையில் தூன்களினால் நிர்மாணிக்கப்படவுள்ள அதிவேக நெடுஞ்சாலைக்கு கேள்வி பத்திரம் கோரப்பட்டதன் பின்னர் எதிர்பார்க்கப்பட்ட வகையில் கேள்வி பத்திரத்தை தயார் செய்திருந்த 'சைனா ஹாபர் இன்ஜினியரிங் கோப்பரேசன்' எனும் நிறுவனத்திற்கு நிர்மாணப்பணியை வழங்குவதற்று அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
இதற்கமைய குறித்த நிறுவனத்திற்கு 3 வருடங்கள் நிர்மாணிப்பதற்கும், நிர்மாணித்த செலவினங்களையும் இலாபத்தினை பெறுவதற்கு மேலதிக 15 வருடங்களும், மொத்தமாக 18 வருடங்கள் வழங்கப்படும். அதன் பின்னர் குறித்த நிறுவனத்தினால் அதிவேக நெடுஞ்சாலையின் உரிமம் இலங்கை அரசாங்கத்திற்கு வழங்கப்பட வேண்டும் என தெரிவித்தார்.