இரண்டு பெண்களின் சடலங்கள் இடம் மாறிய சம்பவமொன்று நிகவெரட்டிய ஆதார மருத்துவமனையில் இடம்பெற்றமையால் அங்கு பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது.
நிகவெரட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 67 வயதுடைய பெண்ணொருவரின் சடலமும், மஹவ பிரதேசத்தைச் சேர்ந்த 81 வயதுடைய பெண்ணொருவரின் சடலங்களுமே இவ்வாறு இடம் மாறியுள்ளன.
நிகவெரட்டிய பகுதியைச் சேர்ந்த 67 வயதுடைய பெண்ணின் சடலம் மஹவ பிரதேசத்தில் உள்ள இறந்தவரின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, அவர்கள் சடலத்தை தகனம் செய்வதற்காக மயானத்திற்கு கொண்டு சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து, நிகவெரட்டிய பகுதி பெண்ணின் உறவினர்கள் சடலத்தை பெற்றுக்கொள்ள வந்தபோது, சடலம் மாற்றப்பட்டுள்ள சம்பவம் தெரியவந்துள்ளது. இதனையடுத்து அங்கு பதற்றமான சூழ்நிலை உருவானது.
சம்பவம் தொடர்பில் நிகவெரடியவில் உள்ள உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளனர். சடலம் மாற்றப்பட்டமை தொடர்பில் மருத்துவமனை நிர்வாகம் முறையான பதிலை வழங்கவில்லை என அந்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.