போலி அமெரிக்க டொலர்கள் அச்சிடப்பட்டுள்ள மோசடி தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.
இது தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள 08 பேர் வழங்கிய வாக்குமூலத்திற்கு அமைய இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் போலி நாணயத்தாள் விசாரணை பணியகத்தின் ஊடாக கடந்த 02 மாத காலப்பகுதியில் கந்தளாய் மற்றும் அநுராதபுரம் ஆகிய பிரதேசங்களில் குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.
அவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் போது, இலங்கை ரூபாவிற்கு மேலதிகமாக அமெரிக்க டொலர்களும் அச்சிடப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
எனவே இவ்வாறு அச்சிடப்பட்டுள்ள போலி அமெரிக்க டொலர்கள், நாணய மாற்றும் நிலையங்களுடனும், நிதி நிறுவனங்களிலும் பரிமாற்றப்படலாம் என குற்றப்புலனாய்வு திணைக்களம் எச்சரித்துள்ளது.
எனவே இது போன்ற தகவல்கள் அறிந்தால் அறிவிக்குமாறு குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் போலி நாணயத்தாள் விசாரணை பணியகம் பொது மக்களிடம் கோரியுள்ளது.
0112326670 அல்லது 0112320145 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு அழைத்து அது குறித்த தகவல்களை வழங்க முடியும்.