அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்காக இன்றைய தினம் நடமாட்ட கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் வழங்கப்பட்ட ஆலோசனைகளை மீறி பெரும்பாலான பகுதிகளில் பொது மக்கள் வாகனங்களில் பயணித்துள்ளமை அவதானிக்கப்பட்டது.
நடந்து சென்று அருகில் உள்ள வர்த்தக நிலையங்களில் பொருட்களை கொள்வனவு செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டிருந்த போதிலும் சிலர், நிர்மாண பணிகளுக்காக பயன்படுத்தப்படும் தள்ளு வண்டிகளை பயன்படுத்தி பொருட்களை கொண்டு சென்றதாக எமது செய்தியாளர்கள் தெரிவித்தனர்.
அத்தியாவசிய வர்த்தக நிலையங்கள் அருகில் உள்ள போதும் மருந்தகங்கள் மற்றும் வங்கிகளும் தொலைவில் உள்ளதால் நடந்து செல்வது கடினமான விடயம் என பொது மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அத்துடன் வீட்டுக்கு தேவையான பொருட்களை கொள்வனவு செய்து ஒருவரால் சுமந்து செல்வதும் கடினம் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
எனவே வாகனங்களை பயன்படுத்த முடியாததால் தள்ளு வண்டிகளை உபயோகிக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.
நாடளாவிய ரீதியில் அமுலாகியுள்ள நடமாட்ட கட்டுப்பாடுகள் இன்று அதிகாலை 04.00 மணிக்கு தளர்த்தப்பட்டுள்ள நிலையில் இரவு 11.00 மணி முதல் மீண்டும் செயற்படுத்தப்படவுள்ளது.
இந்த நடமாட்ட கட்டுப்பாடுகள் எதிர்வரும் 07ஆம் திகதி வரை அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் மே 31 ஆம் திகதி மற்றும் ஜூன் மாதம் 04 ஆம் திகதியும் அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்காக மீண்டும் தளர்த்தப்படவுள்ளது.