இலங்கையில் பயங்கரவாத செயற்பாடுகள் இடம்பெறுவதற்கான சாத்தியம் காணப்படுவதாக அமெரிக்க வெளியுறவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக இலங்கைக்குப் பயணம் செய்வதைத் தவிர்க்குமாறு தமது பிரஜைகளுக்கு அமெரிக்கா அறிவுறுத்தியுள்ளது.
இதற்கமைய, பொதுமக்கள் ஒன்றுகூடும் பகுதிகளில் சிறிய அளவிலான எச்சரிக்கையுடன் அல்லது எச்சரிக்கையின்றி பயங்கரவாதிகள் தாக்குதல்களை நடத்தும் சாத்தியம் காணப்படுவதாக அமெரிக்க வெளியுறவுத் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அத்துடன், தூரப் பகுதிகளில் வசிக்கும் அமெரிக்க பிரஜைகளுக்கு அவசரகால உதவிகளை வழங்குவதற்கு அமெரிக்க அரசாங்கம் மட்டுப்படுத்தப்பட்ட திறனைக் கொண்டுள்ளதாகவும் அமெரிக்க வெளியுறவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, இலங்கையில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளதன் காரணமாக இலங்கைக்கு பயணிக்க வேண்டாம் என அமெரிக்க வெளியுறவுத் திணைக்களம் முன்னதாக குறிப்பிட்டிருந்தது.
இதற்கமைய, இலங்கை நான்காம் நிலை எச்சரிக்கை வளையத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.