போர்ட் சிட்டி விவகாரம் முஸ்லிங்களுக்கு நன்மைபயக்கும் செயலாகவே அமையும்! முஸ்லிம் உரிமைகளுக்கான அமைப்பு

advertise here on top
Join YazhNews WhatsApp Community

போர்ட் சிட்டி விவகாரம் முஸ்லிங்களுக்கு நன்மைபயக்கும் செயலாகவே அமையும்! முஸ்லிம் உரிமைகளுக்கான அமைப்பு


இன்று எமது நாட்டில் பேசுபொருளாக மாறியிருக்கும் முக்கிய விவாதம் போர்ட்சிட்டி விடயமே. இந்த விடயம் தொடர்பில் பலரும் பாத, சாதக நிலைகளை பற்றி தங்களின் கருத்துக்களை முன்வைத்து வருகிறார்கள். உண்மையில் எமது நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பியதில் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் பங்களிப்பு அளப்பரியது. இந்த போர்ட்சிட்டி விடயத்தை போன்று 1978 இல் அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தன அவர்களினால் "சுதந்திர வர்த்தக வலயம்" கொண்டுவரப்பட்டது. அதனுடாக வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு வரிச்சலுகைகள், தொழிற்சாலை அமைக்க நிலங்கள். வதிவிட விஸா அனுமதி உட்பட இன்னும் பல சலுகைகளை அந்த சட்டமூலத்தின் அடிப்படையில் வழங்கப்பட்டது என முஸ்லிம் உரிமைகளுக்கான அமைப்பின் தலைவர் மௌலவி ஐ.எம்.எம்.மிப்ளால் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். மேலும் அந்த அறிக்கையில், 


இப்போது போர்ட்சிட்டி விடயத்தில் இலங்கையின் சட்டதிட்டங்களுக்கு புறம்பாக போர்ட்சிட்டி ஆணைக்குழுவுக்கு பிரத்தியோகமாக அதிகாரம் வழங்குவதாக குற்றசாட்டு எழுந்தது. அதில் சில உண்மைகளும் இல்லாமலில்லை. அந்த ஆணைக்குழு அதிகாரத்தை இலங்கை அரசின் நிறுவனங்களால் கட்டுப்படுத்த முடியாது எனும் நிலை இருந்தது உண்மைதான். இது இலங்கையின் இறைமையை சவாலுக்குட்படுத்தும் விடயமாகவே காணப்பட்டது. தங்களை விட நாட்டை நேசிக்கும் முஸ்லிங்கள் நாட்டின் இறைமைக்கு பங்கம் ஏற்படுவது தொடர்பில் கவலை கொள்வது சரியான விடயம் தான். 


இதனால் தான் நீதிமன்றத்தில் வழக்குத்தக்கள் செய்தார்கள். நேற்று நீதிமன்றம் தனது தீர்ப்பை சபாநாயகர் ஊடாக அறிவித்துள்ளது. அதில் பல பிரிவுகளில் அரசியலமைப்புக்கு முரண் இருப்பதாகவும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. அதை திருத்தி சட்டமூலமாக மாற்ற முடியும் என்றும் பரிந்துரைக்கப்பட்டத்துக்கு ஏற்ப அரசாங்கம் இப்போது நீதிமன்ற தீர்ப்பை மதித்து திருத்தங்களுடன் சமர்ப்பித்து இந்த மசோதாவை நிறைவேற்ற முயற்சிக்கிறது. இந்த சட்டமெல்லாம் நிறைவேறி அமுலுக்கு வரும் போது போர்ட்சிட்டிக்கான முதலீட்டாளர்களாக யார் யாரெல்லாம் வருவார்கள் என்று நாங்கள் உற்றுநோக்கினால் இங்கு அதிகமான சீன முதலீட்டாளர்களே அதிகம் வருவார்கள். அதே நேரம் போர்ட்சிட்டியை நிர்மாணிக்கும் நிறுவனத்தை அமெரிக்கா கருப்புபட்டியலில் வைத்துள்ள காரணத்தினால் புவிசார் அரசியல் முரண்பாடுகளை கொண்டுள்ள இந்தியா, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் போன்ற பலரும் இங்கு முதலீடு செய்ய முன்வரமாட்டார்கள். அதே நேரம் மத்தியகிழக்குடன் நெருங்கிய உறவை கொண்டுள்ள சீனாவின் உறவை கொண்டு மத்தியகிழக்கு மற்றும் ஏனைய முஸ்லிம் நாடுகளின் முதலீட்டாளர்கள் இங்கு சீனாவை போன்று நிறைய முதலீடுகளை செய்யும் வாய்ப்பிருக்கிறது. 


ஏற்கனவே இலங்கையில் இஸ்லாமிய நாடுகளுக்கு சொந்தமான டயலொக், எடிசலாட், செரன்டிப் மா ஆலை, பிரின்டிக்ஸ், ஹேமாஸ்,  போன்ற இன்னும் பல பல்தேசிய கம்பெனிகள் இலங்கையில் காலூன்றியுள்ளது. இதே போன்று மத்தியகிழக்கின் முதலீடுகள் அதிகாரிக்கு போது இலங்கையின் பொருளாதார கட்டமைப்பில் முக்கிய பங்குவகிக்க முடியும் இலங்கை பொருளாதார ஆய்வு நிபுணர்களின் கருத்துப்படி இப்போது இலங்கையில் இருக்கும் பொருளாதார கட்டமைப்பில் முஸ்லிங்களுக்குரிய சிறிய, நடுத்தர,பெரிய (பல் தேசிய) வியாபாரங்கள் ஊடாக 30 சதவீதமான பொருளாதார வலுவினை முஸ்லிம் சமூகத்திட்குரிய வர்த்தக செயற்பாடுகள் பங்குவகிக்கின்றன. இனவாத அமைப்புக்கள் இன்று முஸ்லிங்களின் வர்த்தகத்தை குறிவைத்து இனவாத பிரச்சாரங்களை முன்வைக்க காரணம் 10 சதவீதம் கூட இல்லாத முஸ்லிங்கள் பொருளாதாரத்தில் 30 சதவீதம் ஆதிக்கம் பெற்றிருப்பதே. அந்த பொறாமை இப்போது அவர்களுக்கு பயமாக மாறியுள்ளது என்பதே உண்மை. இந்த போர்ட்சிட்டியிலும் மத்தியகிழக்கின் முதலீடுகள் அதிகரித்தால் முஸ்லிங்களின் பொருளாதார ஆதிக்கம் இன்னும் அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது என பொருளாதார ஆய்வாளர்கள் எதிர்வு கூறி வருகிறார்கள். இதனால் தான் எதிர்காலத்தில் முஸ்லிம் சமூகம் பொருளாதாரத்தில் தவிர்க்கமுடியாத சக்தியாக உருவெடுக்கும் வல்லமையும் வாய்ப்பும் இருக்கிறது என்ற பயத்தில் இனவாதிகள் இப்போது இருந்து கொண்டிருக்கிறார்கள். 


எனவே தான் வெளிப்படையாக இந்த உண்மையை கூறாமல் பௌத்த பிக்குகளும், சிங்கள அமைப்புக்களும் இதை கடுமையாக எதிர்க்கிறார்கள். அவர்கள் இதனை எதிர்க்க பிரதான காரணம் இந்த நாட்டுக்கு இந்த திட்டம் தீங்கானது எனும் பிரச்சாரத்தை சிங்கள மக்களுக்கு முன்வைத்து முஸ்லிம் சமூகம் சார்ந்த விடயத்தை மறைமுகமாக வைத்துள்ளார்கள். ஏனெனில் உலக அரசியலில் சீனாவுக்கும் மத்திய கிழக்கு நாடுகளுக்கும் நெருக்கமான உறவு எப்போதும் இருந்துகொண்டே வருகிறது. சீன நிறுவனங்கள் மத்திய கிழக்கு நிறுவனங்களை இங்கு முதலீடு செய்ய அழைப்பார்கள் எனும் அச்சம் அவர்களுக்கு இருக்கிறது. இதற்கு சமகால உதாரணம் ஒன்றையே இங்கு நாங்கள் கவனிக்கலாம். பலஸ்தீன் விவகாரத்தில் அமெரிக்கா, உட்பட பல மேற்கத்தைய நாடுகள் இஸ்ரேலின் அநியாயத்திற்கு ஆதரவாக இருக்கும் நிலையில் சீன வெளிவிவகார அமைச்சர் இஸ்ரேலின் செயலை கடுமையாக கண்டித்து ஐ.நாவின் பாதுகாப்பு சபையை உடனடியாக கூட்டுமாறு அறிவிப்பு விடுத்தார். 


எனவே இவ்வாறான விடயங்களை நன்றாக அலசி ஆராய்ந்து பார்க்கும் போது போர்ட் சிட்டி சட்டமூலத்தில் ஒரு சதவீதமாவது முஸ்லிம் சமூகத்திற்கு பாதகம் வருகின்ற எவ்வித அச்சமும் அதில் உள்ளடங்கவில்லை. என்பதோடு முஸ்லிம் சமூகம் சம்பந்தப்பட்ட சட்டமூலமும் இல்லை என்பதை  இந்த நாட்டில் உள்ள ஆயிரக்கணக்கான சிரேஷ்ட முஸ்லிம் சட்டத்தரணிகள் அறிந்த விடயமாக உள்ளது. அதே நேரம் முஸ்லிம் சமூகத்திற்கு இந்த போர்ட்சிட்டியில் உள்ள சாதக நிலைகளை நாட்டின் தற்கால நிலைகளை கவனத்தில் கொண்டு பகிரங்கமாக விளக்க முடியாத அல்லது ஊடகங்களில் பேச முடியாத நிலையே எல்லோருக்கும் உள்ளது என்பதை நாம் சிந்தித்து உணர்ந்து நடக்கவேண்டிய உள்ளோம் என்று குறிப்பிட்டுள்ளார்.


நூருல் ஹுதா உமர்


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.