நாட்டை முழுமையாக இரண்டு வாரங்களேனும் முடக்கினால் மாத்திரமே கொரோனா தொற்று அதிகரிப்பதனை தடுக்க முடியும் என இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (20) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,
நேற்றும் 3,500 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இதேபோன்று மும்மடங்கு நோயாளர்கள் சமூகத்தில் இருக்க முடியும். இவர்களின் வாயிலாக மேலும் தொற்று பரவக்கூடலாம். நிச்சயமாக, தற்போதைய நிலைமைக்கு அமைய இரண்டு வாரங்களேனும் நாட்டு மக்களை வீட்டிற்குள் முடக்க வேண்டிய தேவை காணப்படுகின்றது.
அவ்வாறு ஒரு நடவடிக்கையினை மேற்கொண்டால் மாத்திரமே கொரோனா தொற்று ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவுவதனை தடுக்க முடியும். ஒரு வைத்தியர் என்ற வகையில் நான் பரிந்துரைக்கின்றேன். முடக்க நிலை மிக அவசியமாகும் என அவர் வலியுறுத்தினார்.