சர்வதேச சந்தையில் எரிபொருள் விலை கணிசமான அளவு அதிகரித்துள்ள நிலையில், நாட்டில் முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அமைச்சரவை உபகுழு கவனம் செலுத்தியுள்ளது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நியமிக்கப்பட்ட அமைச்சரவை உபகுழு இன்று (20) கூடிய நிலையில் இந்த விடயம் குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கச்சா எண்ணெய்க்கான மண்ணெண்ணெய் மானியத்தை மீளச் செலுத்துதல் மற்றும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் நிதிப்பிரச்சினை ஆகியன தொடர்பிலும் இதன்போது ஆராயப்பட்டுள்ளது.
அத்துடன், 2019, 2020 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளின் இதுவரையான காலப்பகுதியில் சர்வதேச சந்தையில் எரிபொருள் விலை அதிகளவில் அதிகரித்துள்ளமையினை கருத்தில் கொண்டு பொது மக்களுக்கு நிவாரணம் வழங்குவது குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
மேலும், எரிபொருள் விலை அதிகரிப்பின் காரணமாக கடந்த வருடம் பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு 50 பில்லியன் ரூபா கடனை நிதி அமைச்சு செலுத்தியுள்ளதாகவும் இதன்போது தெரியவந்துள்ளது.
அத்துடன், மேலும் 79 பில்லியன் ரூபா கடன் பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு வழங்கப்படாமல் இருப்பதாகவும் இதன்போது குறிப்பிடப்பட்டுள்ளது.