நாட்டின் சுகாதார துறையினால் வழங்கப்பட்டுள்ள சுகாதார சட்டங்களை பின்பற்றாமல் நடத்தப்பட்ட திருமண வைபவத்தில் பங்கேற்ற மணமகன் மற்றும் மணமகள் உட்பட 11 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றி இருப்பது உறுதியாகியுள்ளது.
இதனையடுத்து புத்தளம் கொஸ்வத்தை மெதகிரிமிட்டியான கிராம சேவகர் பிரிவு இன்று (11) காலை முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தங்கொட்டுவை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரியின் அலுவலகம் தெரிவித்துள்ளது.
மெதகிரிமிட்டியான பிரதேசத்தில் உள்ள மண்டபம் ஒன்றில் கடந்த 09 ஆம் திகதி இந்த திருமண நிகழ்வு நடைபெற்றுள்ளது.
அதில் சுகாதார சட்டங்களை மீறி 140 பேர் கலந்துகொண்டுள்ளதாக கிடைத்த தகவலை அடுத்து அதில் கலந்துகொண்டவர்களுக்கு PCR பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.
பரிசோதனை முடிவுகளின் படி 11 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றி இருப்பது கண்டறியப்பட்டதை அடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.