புனித ரமழான் நோன்பை முன்னிட்டு, இலவசமாக குடிநீர்த் திட்டங்களை வழங்குவதற்கு அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. பேரவை முன்வந்துள்ளது.
சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் செறிவாகக் கலந்து வாழும் பகுதிகளில் இந்தக் குடிநீர்த் திட்டங்கள் அமுல் படுத்தப்படவிருப்பதாக, வை.எம்.எம்.ஏ. பேரவையின் தேசியத் தலைவர் சஹீட் எம். ரிஸ்மி தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு பிரதேசங்களிலுமுள்ள மத வழிபாட்டுத் தலங்களை மையப்படுத்தி இந்தத்திட்டம் அமுல்படுத்தப்படும். பள்ளிவாசல்கள்,கோயில்கள், விகாரைகள் மற்றும் பாடசாலைகளில் குழாய்க் கிணறுகள் அமைத்தல், பிரதானமாக நீர்த் தட்டுப்பாடாகவுள்ள கிராமங்களில் பொதுக் கிணறுகள் அமைக்கும் பணிகளையே, அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. பேரவை முன்னெடுக்கவுள்ளது.
இச்சேவையைப் பெற விருப்பமுடையோர், தமது பிரதேசங்களிலுள்ள வை.எம்.எம்.ஏ. கிளைகளில் அல்லது கொழும்பு, மருதானை, தெமட்டகொடை வீதியில் அமைந்துள்ள வை.எம்.எம்.ஏ. தலைமையகத்தில் அல்லது மாவட்டப் பணிப்பாளர் ஊடாகவோ
விண்ணப்பங்களை ஒப்படைக்குமாறு, தேசியத் தலைவர் சஹீட் எம். ரிஸ்மி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
எதிர்வரும் புனித ரமழான் மாதத்தை முன்னிட்டே இக்குடிநீர்த் திட்டம் அமுல்படுத்தப்பவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
-ஐ. ஏ. காதிர் கான்