இலங்கையிலிருந்து கடல் மார்க்கமாக சட்ட விரோதமாக கடந்த 06ஆம் திகதி வெளிநாடு செல்ல முற்பட்ட 20 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின்போது இவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்தது.
வடமேல் கடற்படை கட்டளை தலைமையகத்தினால் சிலாவத்துறை, கொண்டச்சிகுடா பிரதேசத்தில் சந்தேகத்துக்கிடமாகப் பயணித்த 04 முச்சக்கர வண்டிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இதன்போது முச்சக்கர வண்டியில் பயணித்த 20 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் அவர்கள் சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முற்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்களில் 14 ஆண்களும் 04 பெண்களும் 13 வயதுடைய சிறுமி ஒருவரும் , 16 வயது சிறுவனும் உள்ளடங்குகின்றனர். இவர்களில் 09 பேர் முல்லைத்தீவு பிரதேசத்தையும், நால்வர் யாழ்ப்பாணத்தையும், மேலும் நால்வர் மன்னார் பிரதேசத்தையும் சேர்ந்தவர்களாவர். ஏனைய மூவரும் வாழைச்சேனை, வத்தளை மற்றும் புத்தளம் ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்களாவர்.
இந்த சட்டவிரோத ஆட்கடத்தலுடன் தொடர்புடைய நபரொருவரும் இதில் உள்ளடங்குகின்றமை தெரிய வந்துள்ளது. இவர்கள் அனைவரும் சிலாவத்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.