ஆகக்குறைந்தது 04 நாட்களுக்கு நாட்டை முடக்கி, வேகமாக பரவும் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன கோரியுள்ளார்.
இது தொடர்பில் தேசிய தொலைக்காட்சி செய்திப்பிரிவு ஒன்று அவரிடம் வினவியபோது,
முடக்கநிலை தொடர்பான கோரிக்கையொன்று முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், இன்று மாலை ஜனாதிபதியுடன் விசேட கலந்துரையாடலை முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த சந்திப்பிற்கு கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ள அனைத்து பிரிவினரும், தொற்றுநோயியல் விசேட வைத்தியர்களின் குழாமினரும் அழைக்கப்பட்டுள்ளனர்.
தமது கோரிக்கைக்கு ஜனாதிபதியிடமிருந்து சாதகமான பதில் கிடைக்கப்பெறும் என உபுல் ரோஹன தெரிவித்தார்.
நாட்டில் தற்போது அதிகரிக்கும் கொரோனா பரவலை கருத்திற்கொண்டு பொதுமக்கள் அவதானமாக செயற்படவேண்டும் என அவர் கோரியுள்ளார்.