ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்று நோய்கள் மற்றும் கொரோனா தொற்று நோய் கட்டுப்பாட்டு இராஜாங்க அமைச்சினால் புதிய சுகாதார வழிகாட்டல் வெளியிடப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றின் மூன்றாவது அலையை கருத்திற் கொண்டு இன்று (23) முதல் எதிர்வரும் மே மாதம் 31 ஆம் திகதி வரை பொது நடவடிக்கைகளை எவ்வாறு மேற்கொள்வது என்பது குறித்து அரசாங்கத்தினால் சுகாதார வழிகாட்டுதல்கள் வௌியிடப்பட்டுள்ளன.
குறித்த வழிகாட்டலில், அத்தியாவசிய சேவைக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைகள் தவிர்ந்த ஏனைய செயற்பாடுகளுக்காக, வீட்டிலிருந்து வெளியே செல்ல இரண்டு பேருக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பேருந்து, தொடருந்து உள்ளிட்ட பொதுப் போக்குவரத்துகளில், இருக்கைகளின் எண்ணிக்கைக்கு அமையவே பயணிகள் பயணிக்க முடியும்.
முச்சக்கர வண்டிகளிலும் பயணிக்கக்கூடிய அதிகபட்ச நபர்களின் எண்ணிக்கை இரண்டாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளதுடன், ஏனைய வாகனங்களில், இருக்கைகளின் எண்ணிக்கைக்கு அமைய பயணிகளின் எண்ணிக்கை மட்டுப்படுப்படுத்தப்பட்டுள்ளது.
அரச மற்றும் தனியார் நிறுவனங்களில், தேவைக்கேற்றவாறு பணிக்குழாமினரை சேவையில் ஈடுபடுத்த முடியும்.
அத்துடன், பல சந்தர்ப்பங்களில் வீடுகளில் இருந்து பணிபுரிவதற்கான செயற்திட்டங்களை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.