ஐக்கிய அரபு அமீரகத்தைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் லூலூ குழுமத்தின் (LuLu Group) தலைவரான யூசுப் அலி, பயணித்த ஹெலிகாப்டர் கேரளா - கொச்சியின் புறநகர்ப் பகுதியில் விபத்துக்குள்ளானது.
ஹெலிகாப்டரில் இவருடன் 6 பேர் பயணித்தனர். அப்பகுதியில் கடும் காற்றுடன் மழையும் பெய்ததால் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது என்று அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
விமானி சமாளித்து விமானத்தைச் செலுத்தியதால், சதுப்பு நிலப் பரப்பில் விமானம் தரையிறக்கப்பட்டது. யூசுப் அலி மற்றும் அவருடன் பயணித்த 06 பேரும் மயிரிழையில் உயிர் தப்பினர். மேலும் அவர்களுக்குச் சிறிய காயங்கள் மட்டுமே ஏற்பட்டுள்ளது. அருகில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் அவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஐக்கிய அரபு அமீரகத்தின் இரண்டாவது பெரிய பணக்காரர் யூசுப் அலி என்று ஃபோர்ப்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. இவரின் சொத்து மதிப்பு இந்திய 35 ஆயிரம் கோடியாகும். இவர் உலகம் முழுவதிலும் பல தொழில்களை நடத்தி வருகிறார். கொரோனா தொற்று காலத்தில், கேரளாவில் கொரோனா நோயாளிகளுக்கு 1,400 படுக்கைகளைக் கொண்ட மருத்துவ மையத்தை உருவாக்கினார். மேலும் 68 லட்சம் இந்திய ரூபாய் நிதி வழங்கியுள்ளார்.