பதுளை – ஹல்துமுல்ல – வெலிஓயாவில் நேற்றைய தினம் நீராடச் சென்ற நிலையில், நீரில் இழுத்துச் செல்லப்பட்டுக் காணாமல் போன தந்தை மற்றும் மகனை தேடும் பணியில் பொலிஸார் நேற்றைய தினம் ஈடுபட்டனர்.
இந்நிலையில் 17 வயதான மகன் மற்றும் 52 வயதான தந்தையின் சடலங்களை இன்றைய தினம் மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தியத்தலாவயிலிருந்து இராணுவ மீட்புக் குழுவினர், பிரதேச வாசிகளின் ஒத்துழைப்புடன் தந்தை-மகனைத் தேடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகத் தெரியவந்துள்ளது.
அவர்கள் காணாமல் போன இடத்திலிருந்து சுமார் 600 மீற்றர் தொலைவிலுள்ள பாறைகளுக்கிடையே இரு சடலங்களும் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
புத்தாண்டு விடுமுறையைக் கழிப்பதற்காக மஹரகம, பமுனுவவிலிருந்து பண்டாரவளைக்குச் சென்று கொண்டிருந்தபோது வெலிஓயாவில் நீராடியபோது குறித்த அனர்த்தம் ஏற்பட்டதாக அப்பகுதியின் கிராம சேவகர் தெரிவித்துள்ளார்.
அண்மையில் வெலிஓயா பகுதியில் பெய்த கனமழையால் வெலி ஓயா ஆற்றின் நீர் மட்டம் உயர்ந்தமையால் இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரியவந்துள்ளது.