சமூக வலைதளங்களில் இனத்துரோக கருத்துக்களை வெளியிடுவோரை தண்டிக்க சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்பட உள்ளதாக பொதுப்பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
கடும்போக்குவாத மற்றும் பயங்கரவாத கருத்துக்களை சமூக ஊடகங்களில் பிரச்சாரம் செய்யும் தரப்பினருக்கு தண்டனை வழங்கக் கூடிய வகையில் குற்றவியல் சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
முல்லேரியா பிரதேசத்தில் இன்று (15) நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் சாசனத்தில் பேச்சு சுதந்திரம் காணப்பட்டது என்ற போதிலும் அதற்கு இடையூறு ஏற்படுத்தாத வகையில் தற்போதைய சட்டத்தில் திருத்தங்களை செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
சமூக ஊடகங்களில் இனங்களுக்கு இடையில் முரண்பாட்டை ஏற்படுத்தக் கூடிய வகையில் பொய்யான செய்திகள் வெளியிடப்பட்டு வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
இனவாதத்தை தூண்டும் இனத்துரோக செயற்பாடுகளில் ஈடுபடுவோரை தண்டிக்கும் வகையில் சட்டத் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட உள்ளது என பொதுப்பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர குறிப்பிட்டுள்ளார்.