முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு வயல் பகுதியில் மின்னல் தாக்கி விசாயிகள் மூவர் உயிரிழந்துள்ளனர்.
முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தண்ணிமுறிப்பு வயலில் நேற்று (16) வியாழக்கிழமை விவசாய நடவடிக்கைகாக சென்றிருந்த மூன்று விவசாயிகளே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விவசாய நடவடிக்கையின் நிமித்தம் வயலுக்குச் சென்றிருந்த விவசாயிகள் வீடு திரும்பாமையின் காரணமாக அவர்களது குடும்பத்தினர் இவர்களை தேடிச் சென்றுள்ளனர். இதன்போது உயிரிழந்த நிலையில் சடலமாக அவர்கள் காணப்படுவதை அவதானித்த குடும்பத்தினர் அது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.
குமுழமுனை தெற்கு, மேற்கு மற்றும் வற்றாப்பளை பகுதியைச் சேர்ந்த 34 - 46 ஆகிய வயதுக்கு இடைப்பட்ட மூவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.
சம்பவ தினத்தன்று குறித்த பகுதியில் கடுமையான மழைகாணப்பட்டதுடன் , இதன்போது ஏற்பட்ட மின்னல் தாக்கம் காரணமாகவே இந்த உயிரிழப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் தெரிவித்துள்ளதுடன் , இது தொடர்பான மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.
இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டம் படுவாங்கரைப் பிரதேசத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மலையர்கட்டு கிராமத்தில மின்னல் தாக்கியதில் வயலில் வேலை செய்து கொண்டிருந்த விவசாயி ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.
மேலும் ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள மாவடிவேம்பு பிரதேசத்தில் வீதியால் சென்று கொண்டிருந்த 04 ஆண்கள் மீது மின்னல் தாக்கியதில் படுகாயமடைந்தனர். அதேவேளை, வாகரை பொலிஸ் பிரிவிலுள்ள கிருமிச்சை பிரதேசத்தில் வீட்டில் யன்னல் அருகே இருந்த பெண் ஒருவர் மின்னல் தாக்குதலில் காயமடைந்துள்ளார். இவர்கள் அனைவரும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
நன்றி- வீரகேசரி