புத்தளம் பகுதியில் கணவனால் தாக்கப்பட்டு மனைவி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். புத்தளம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட முள்ளிபுரம் பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
புத்தளம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட முள்ளிபுரம் பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றிலிருந்து இன்று (10) பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டார். இது தொடர்பில் புத்தளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.
அதற்கமைய வெட்டாலை பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.
உயிரிழந்த பெண்ணுக்கும் அவரது கணவருக்கும் இடையில் நேற்று இரவு ஏற்பட்ட முரண்பாட்டில் கோபமடைந்த கணவன் அவரது மனைவியை தடியினை கொண்டு தாக்கி கொலை செய்துள்ளதாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
சந்தேகநபர் அவரது மனைவியின் சடலத்தை உரைப்பையால் மூடி கட்டிலின் கீழ் மறைத்து வைத்துள்ளதுடன், அன்றைய தினம் இரவு சடலத்தை வேறு பிரதேசத்துக்கு எடுத்துச் சென்று மறைத்து வைக்கவும் திட்டமிட்டிருந்துள்ளார்.
எனினும் பொலிஸாருக்கு தகவல்கள் கிடைக்கப் பெற்றதையடுத்து கட்டிலின் கீழ் மறைத்து வைக்கப்பட்டிருந்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.
35 வயதுடைய குறித்த சந்தேக நபரை கைது செய்து புத்தளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். சடலம் தொடர்பான நீதிவான் பரிசோதனைகளின் பின்னர் மரண பரிசோதனைகளும் இடம்பெறவுள்ளன.