சிறைத்தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு மன்னிப்பு வழங்குமாறு கோரி எழுத்து மூலம் கோரிக்கை விடுத்தால், ஜனாதிபதியின் பொது மன்னிப்பு அவருக்கு கிடைக்கும் என அரசாங்கத்தின் உயர்மட்டத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரஞ்சன் ராமநாயக்கவுக்கு வழங்கப்படும் மன்னிப்பு முழுமையான மன்னிப்பாக அல்லது நிபந்தனைகளுடன் கூடிய மன்னிப்பு என்பது குறித்து இன்னும் தீர்மானிக்கப்படவில்லை.
அரசியலமைப்புச் சட்டத்தின் 33 (04) சரத்திற்கு அமைய இலங்கையின் நீதிமன்றம் ஒன்று எந்த குற்றத்திற்காக தண்டனை வழங்கினாலும் தண்டனை பெற்ற அந்த நபரை விடுதலை செய்யும் அதிகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ளது.
ரஞ்சன் ராமநாயக்கவுக்கு மன்னிப்பு வழங்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் கோரிக்கை விடுத்திருந்தார். இது சம்பந்தமாக எழுத்து மூலம் கோரிக்கை விடுத்தால், அதன் பின்னர் கோரிக்கையை ஆராய முடியும் என ஜனாதிபதி, எதிர்க்கட்சித் தலைவருக்கு அறிவித்துள்ளார்.
இதனிடையே ரஞ்சன் ராமநாயக்கவின் நலன் குறித்து அறிந்துக்கொள்ள அமைச்சர் நாமல் ராஜபக்ச அண்மையில் அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்கு விஜயம் செய்திருந்தார். அப்போது தான் வழங்கும் கடிதம் ஒன்றை ஜனாதிபதியிடம் கையளிக்க முடியுமா என ரஞ்சன், நாமல் ராஜபக்சவிடம் கேட்டுள்ளார்.
இப்படியான கடிதத்தை தன்னூடாக அல்லாமல், சிறைச்சாலை அதிகாரிகள் மூலம் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்குமாறு நாமல் ராஜபக்ச, ரஞ்சனிடம் கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.