பாடசாலை மற்றும் தனியார் கல்வி நிலையங்களுக்கு கற்பதற்கு செல்வதாகக் கூறி, அங்கு செல்லாது மட்டக்களப்பு கூளாவடி பகுதியிலுள்ள ரயில் தண்டவாளத்தில் புகைத்தலில் ஈடுபட்டுக் கெண்டிருந்த உயர்தர வகுப்பு மாணவர்கள் 6 பேரை பொலிஸார் பிடித்து பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று பெற்றோரை வரவழைத்து எச்சரித்த விடுவித்த சம்பவம் நேற்று (31) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸாருக்கு தொடர்ந்து கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய ரயில் தண்டவாளப்பகுதியில் புகைத்தலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த உயர்தரத்தில் கல்வி கற்று வரும் மாணவர்களை சுற்றிவளைத்தபோது அவர்களில் பல மாணவர்கள் தப்பி ஓடியுள்ள நிலையில் 6 பேரை பிடித்தனர்.
இவர்கள் மாமாங்கம், புன்னைச்சோலை, அதிகாரி வீதி, பார்வீதி போன்ற பகுதிகளிருந்து பாடசாலைக்கு செல்வதாகவும் தனியார் வகுப்புக்குச் செல்வதாக பெற்றோரிடம் தெரிவித்து வீட்டிலிருந்து வெளியேறி கல்வி கற்பதற்கு செல்லாது குறித்த ரயில் தண்டவாளப்பகுதில் ஒன்று கூடி புகைத்தல் ஈடுபட்டுள்ளனர்.
இவர்களின் பெற்றோரை பொலிஸ் நிலையத்துக்கு வரவழைத்து பிள்ளைகள் தொடர்பாக பொற்றோர் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என அறிவுரைகள் கூறி அவர்களை எச்சரித்து பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
-கனகராசா சரவணன்